விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது மனைவி நந்தினி, மகள் நித்யா (16) மற்றும் ஒன்றரை வயது குழந்தை செந்தமிழ்ச்செல்வியுடன் தனது உறவினா் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியான ஈமச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக திண்டிவனம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் வடவனூர் பகுதியில் வந்தபோது எதிரே கட்டுப்பாட்டை இழந்து, அசுரவேகத்தில் வந்த இன்னோவா கார், ஒன்று குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் குமரேசன், நித்யா, குழந்தை செந்தமிழ்ச்செல்வி மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
கர்ப்பிணி நந்தினி படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் பயணம் செய்த மூன்று பேரும் தலைமறைவாகி விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காரை பறிமுதல் செய்து, தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


