
குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் தீக்குளித்து இறந்தார். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலியும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பெருகி வரும் குடிகாரர்களால் நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது. குடியை நிறுத்த சொன்ன பெற்றோர் ஆத்திரத்தில் தீக்குளித்த இளைஞரின் சோக கதை.
சென்னையை அடுத்துள்ள கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பொன்னி அம்மன் நகர், 7-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கோவிலம்பாக்கம் சத்யா நகர் 6-வது தெருவை சேர்ந்த திவ்யா (22) என்ற பெண்ணை சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் மணிகண்டனை அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக அவருக்கும், பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 29-ந் தேதி இரவு மணிகண்டன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அவரை கண்டித்த அவரது பெற்றோர், மணிகண்டனை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி கதவை பூட்டி உள்ளனர். இதனால் மணிகண்டன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார்.
அதன்பிறகு அவரது பெற்றோர், ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய்?. குடிப்பழக்கத்தை விட்டு விடு என மகனுக்கு அறிவுரை கூறினர்.
இதனால் கடும் கோபம் அடைந்த மணிகண்டன், பாட்டிலில் வைத்து இருந்த மண்எண்ணெயை தனது தலையில் ஊற்றி, பெற்றோர் கண் முன்னே தீக்குளித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டன் உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதலனை தினமும் மருத்துவமனைக்கு சென்று திவ்யா பார்த்து வந்துள்ளார். நேற்று காதலன் மணிகண்டன் உயிரிழந்த தகவல் அறிந்து மனம் உடைந்த திவ்யா, தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலன் தீக்குளித்து இறந்த துக்கம் தாங்காமல் காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


