கோவை: மும்மொழி கொள்கையை தான் எந்த இடத்திலும் ஆதரிக்கவில்லை எனவும், இருமொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சேலத்தில் வெள்ளிக் கிழமை போக்குவரத்து நெரிசலை குறைக்க இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதி திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
பருவமழை பொய்த்ததன் விளைவாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசணை கூட்டம் நடத்தி நிதி ஒதுக்கீடு செய்ததாகவும் கூறினார்.
மேலும் குடிநீர் பிரச்னையை தீர்க்க போதிய நிதி ஒதுக்கி தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று கூறியதை அரசியல் கட்சிகள் கண்டிக்கவில்லை எனவும், ஜூன் மாதத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை குறுவை சாகுபடிக்கு திறக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்றும், பத்திரிக்கைகள்தான் இதை பெரிதுபடுத்தி குளிர் காய நினைப்பதாகவும் உறுதி படத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் நிற்காமல் குறைந்த தொகுதியில் போட்டியிட்டதால்தான் வாக்கு சதவீதம் குறைந்துள்ளதே தவிர வாக்கு வங்கி குறையவில்லை எனவும, திமுக நடைமுறைபடுத்த முடியாத பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
மும்மொழி கொள்கையை ஆதரிப்பதாக எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை என்றார்.
டெல்லியில் சில பத்திரிகையாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் தான் தமிழை பிற மாநிலங்களில் விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டுமென பிரதமருக்கு டிவிட்டரில் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக தனது டிவிட்டர் கருத்து திரிக்கப்பட்டதாகவும், டிவிட்டரில் போட்ட போதே இவ்வளவு சர்ச்சை வந்ததால் தான் டிவிட்டரில் இருந்து அந்தப் பதிவை நீக்கியதாகவும் அவர் கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை தவிர மீதம் 6 பேரை விடுதலை செய்யக்கூடாது என அப்போதைய முதல்வர் கருணாநிதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்ததாகவும், அதை எதிர்கட்சிகள் ஏன் கேட்கவில்லை எனவும் அவர் கேள்வி 3ழுப்பினார்.
அமமுகவில் இருந்து விலகி பலர் அதிமுகவில் இணைந்து வருவதாகக் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக., வலுவாக உள்ளது என்றார்.


