நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. இதை அடுத்து சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குளுகுளு வென காற்று அடிக்கிறது. பூவாய்த் தூறல் விழுகிறது. இருப்பினும் கனமழையோ, தொடர் மழையோ இல்லை. சீசன் நேரத்து தூறலும் சாரலும் மட்டுமே இருப்பதால் அருவிகளில் நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவியில் இன்று காலை முதல் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பலரும் வந்து குவியும் குற்றாலம் மெயின் அருவியில் இன்னமும் நீர் விழத் தொடங்கவில்லை.
கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தென் மேற்குப் பருவ மழை காரணமாக கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதே நேரம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மெதுவாக மழை மேகங்கள் சூழத் தொடங்கியது. இதை அடுத்து நேற்று மாலை முதல் மழை தூறத் தொடங்கியது.
குற்றாலத்தில் வருடந்தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சீசன் களைகட்டும். சாரல் மழையும், குளுகுளுவென மெல்லிய காற்றும் வீசும். இந்த இயற்கை சுகத்தை அனுபவிக்க என்றே பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கே குவிவது வழக்கம். இந்த முறை தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் ஒருவார காலம் தாமதம் ஏற்பட்டது. இதனால் கோடை கால நீட்சியாக, குற்றால அருவிகள் வறண்டு காணப்பட்டன.
இதனிடையே கடந்த இரு தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. செங்கோட்டை, தென்காசி பகுதியில் தூறலும் லேசான மழையும் இருந்தது.