தங்க தமிழ்ச்செல்வன் இன்று ஒரு நாள் மட்டும் ஹீரோ, நாளை முதல் ஜீரோ என்றார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்!
அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் புடை சூழ, சென்னை அண்ணா அறிவாலயம் வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
செந்தில் பாலாஜி, கலைராஜன் ஆகியோரைத் தொடர்ந்து, அமமுக.,வில் இருந்து வெளியேறி, தங்கதமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைந்துவிட்டார்.
இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுகவில் இணைந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் இன்று ஒரு நாள் மட்டும் ஹீரோ! நாளை முதல் ஜீரோ.
அதிமுக அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை மு.க.ஸ்டாலின் உணர்ந்துள்ளார். எனவே தான் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாபஸ் பெற்றார். அவருக்கு நன்றி… என்று கூறினார் ஜெயக்குமார்.