புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சென்னையில் சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், 20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன்.
எல்லோருடைய கோபம், அச்சம் என்னவென்றால் மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான மாணவர்களுக்காகச் செய்யப்படவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டு. சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு பரிந்துரையில், ஒரு ஆசிரியர் அல்லது 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று சொல்கிறார்கள்.
அந்த மாணவர்கள் எங்கே போவார்கள்? கிராமங்களில் படிப்பவர்களின் ஆரம்பப் பள்ளி வாழ்க்கை இனி என்னவாகப் போகிறது? எங்கள் வீட்டில் மூன்று மொழிப் பேசுபவர்கள் உள்ளார்கள்.
இருந்தாலும் என் மகனுக்கு, என் மகளுக்கு மூன்றாவது மொழியைச் சொல்லிக் கொடுப்பது சவாலாக உள்ளது. இதனால் முதல்தலைமுறை மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? மூன்றாவது மொழியைத் திணித்தால் அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது திணிக்கப்படும்.

நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம். 10 வருடங்களாக 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்? எல்லாத் தேர்வுகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால் தான் எந்த டிகிரியாக இருந்தாலும் போகமுடியும். நீட் தேர்வு சமூகத்தின் சமநிலையை மாற்றுகிறது.
தேர்வுப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி. எட்டாவதிலிருந்து தேர்வுகளை எழுத பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன.
அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பான்? இவ்வளவு நுழைத்தேர்வுகள் இருந்தால் எங்குச் சென்று படிப்பார்கள்?
ரூ. 30,000 சம்பாதிப்பவர்களே, ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் கொண்ட பள்ளியில் தங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் எனத் தவியாகத் தவிக்கிறார்கள்.
பயிற்சி மையங்கள் காளான்களாக முளைத்துள்ளன. நான்கில் ஒரு பங்குக் கல்லூரிகளைக் குறைக்கப் போகிறார்கள். 50,000 கல்லூரிகள் 12,000மாகக் குறைக்கப்படவுள்ளன. இதனால் ஊர்களில், கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் மூடப்படும்.
கல்வி பயில மறுபடியும் அவர்களுக்குத் தடை ஏற்படும். நிறைய நுழைத் தேர்வுகள் நடக்கப்போகின்றன. ஆனால் படிப்பதற்குப் பள்ளிகள், கல்லூரிகள் இருக்கப்போவதில்லை.
இதுபற்றிய பயமோ, விழிப்புணர்வோ ஏன் நம்மிடம் இல்லை. இதனால் எனக்குத் தூக்கமில்லை. தூக்கம் இல்லாமல் தான் நான் இவ்வளவு கோவப்பட்டுப் பேசுகிறேனா எனத் தெரியவில்லை.
எல்லோரும் தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் என அத்தனை பேரும் விழித்துக்கொள்ளவேண்டும்.
அனைவரும் ஜூலை 30-க்குள் அதற்கான இணையத்தளத்தில் உங்களுடைய கருத்துகளைத் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.
இது நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது. அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் என்ன மாற்றம் வேண்டுமோ அதை உடனடியாகச் செய்யவும் விழித்திருந்து செய்யவும் அகரம் மூலமாகச் சொல்லவேண்டும் என எண்ணினேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பங்கேற்று பேசுகையில், புதிய கல்விக்கொள்கையில், தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்ப மொழி, என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இருக்கும்பட்சத்தில் எவ்வாறு இந்தி மொழி திணிக்கப்படுவதாக அமையும், என கேள்வி எழுப்பினார்.
மேலும், புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர் வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.



