திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் தேசியப் புலனாய்வுப் பிரிவு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
வெளிநாடுகளில் இருந்தபடி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் சென்னை, கோவை, நாகை உள்ளிட்ட இடங்களில் சில தினங்களுக்கு முன்னர் தேசிய புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் வளைகுடா நாடுகளில் தங்கியிருந்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி, நாடு கடத்தப் பட்ட 14 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும், வாட்ஸ் அப் குழு மூலம் தகவல் பரிமாறி, வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் இணைப்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் அனைவரும் தடை செய்யப் பட்ட அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதை அடுத்து இந்த அமைப்பில் தொடர்புடையவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் உள்ளூர் போலீஸாரும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை, தேனி, ராமநாதபுரம் கீழக்கரை, நெல்லை மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நேற்று பயங்கரவாதிகளுக்கு நிதி வசூல் செய்ததாக மதுரை நரிமேடு பகுதியி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் திரட்டியதாக கைது செய்யப்பட்ட 14 பேரில் ஒருவரான முகமது ஷேக் மைதீன் என்பவரின் மதுரை வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, மதுரை நாகை, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் துபையில் பணிபுரிந்தபடி வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி ஆட்களை சேர்த்தனர். அவர்களை துபை போலீசார் இந்தியாவுக்கு நாடு கடத்தினர். தில்லி வந்த 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது கைதானவர்களில் ஒருவரான மதுரை நரிமேடு முஹம்மது ஷேக் மைதீன் என்பவரின் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. என் ஐ ஏ அதிகாரிகள் நேற்று மதுரை வந்து அவரது வீட்டில் சில மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, கைதான 14 பேர் வீடுகளில் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.