அத்திவரதரை இடம் மாற்ற முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த நிலையில், ஆகம விதிப்படி அத்திவரதரை இடமாற்றம் செய்யக் கூடாது என தலைமை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நடை பெற்று வரும் அத்திவரதர் வைபவத்தை லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்து வருவதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று வரதராஜ பெருமாள் கோயிலில் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு நடத்தினர். கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து பக்தர்களிடம் குறைகளைக் கேட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், கோயில் வசந்த மண்டபத்திலேயே அத்தி வரதர் தரிசனத்துக்கு எந்த மாதிரியான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய முடியும் என ஆலோசித்து வருகிறோம்! ஆகம விதிப்படி வசந்த மண்டபத்தில் இருந்து சுவாமியை வெளியே எடுக்க முடியாது. பக்தர்கள் வசதிக்காக கூடுதல் கழிவறைகள், பேட்டரி கார்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அத்திவரதர் உத்ஸவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப் படுவதால் கூடுதல் கூடாரம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அத்திவரதரை, நோயாளிகள், முதியவர்கள், தரிசிக்க பேட்டரி கார்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்கள் கூடுதலாக பிஸ்கட், தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
வரிசையில் நிற்பவர்கள் சற்று நேரம் ஓய்வெடுக்க நாற்காலி வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளோம். முக்கிய நாட்களில், அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகாலை 4 மணிக்கு துவங்குவது குறித்து பரிசீலிக்கப் படுகிறது.
விஐபி தரிசனம் பொதுமக்களைப் பாதிக்காத வகையில் செயல் படுத்தப்படும். வரதராஜப் பெருமாள் கோயில் மேற்கு கோபுர பகுதியில், மருத்துவ முகாம் நடத்தப்படும். வெளிமாவட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள் … என்றார் சண்முகம்.
உடன் இருந்த டிஜிபி திரிபாதி கூறுகையில், அத்திவரதர் உத்ஸவத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவிக்கு கூடுதலாக தன்னார்வலர்களை அழைத்துள்ளோம் என்று கூறினார்.
முன்னதாக, பக்தர்கள் அத்திவரதரை சிரமமின்றி தரிசிக்கும் வகையில் தற்போதுள்ள இடத்தை மாற்றம் செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.