- நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
- பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தனி இடத்தில் வைத்து விசாரணை.
- கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்.
- தேர்தலில் சீட் வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததால் கொலை நடந்திருக்கலாம் என தகவல்.
நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில் திமுக மாநில ஆதி திராவிட குழு உறுப்பினர் சீனியம்மாளின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று கூறி பிரசாரம் செய்து சென்ற கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோரின் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப, அதற்குக் காரணமான வகையில் திமுக., பிரமுகர் மகனாலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது நெல்லை திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகியோரை கடந்த 23ஆம் தேதி மதியம் மர்ம கும்பல் ஒன்று, கத்தியால் குத்தி, கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரித்து வந்த போலீஸார், இது குறித்து 3 தனி படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொலையான உமா மகேஸ்வரியின் வீட்டில் இருந்து நகை பணம் கொள்ளை போனதால், இது முதலில் ஆதாயக் கொலை என்ற கோணத்தில் விசாரிக்கப் பட்டது. ஆனால் பின்னர் சொத்து பிரச்னை, அரசியல் ரீதியான கொலை, தேர்தலில் சீட் வாங்கி தருவதில் பண மோசடியால் நடைபெற்ற கொலை என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஆனால், இந்தக் கொலை குறித்து பெரிதாக துப்பு எதுவும் துலங்கவில்லை. இந்தப் பகுதியில் கிடைத்த ஒரே ஒரு சிசிடிவி கேமரா பதிவுகளிலும் இது குறித்து பெரிதாக எதுவும் கண்டறியப் படவில்லை.
இந்நிலையில் மதுரையில் உள்ள திமுக பிரமுகர் சீனியம்மாள், உமா மகேஸ்வரியின் அண்ணன் மகன் பிரபு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையிலும் காவல்துறைக்கு கொலை வழக்கு தொடர்பாக எந்த துப்பும் கிடைக்கவில்லை.
பின்னர் உமா மகேஸ்வரி வீட்டுக்கு அருகில் உள்ள ஹோட்டல் சிசிடிவி கேமரா காட்சியை மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய போலீஸார், ஒரு கட்டத்தில், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஸ்கார்பியோ கார் ஒன்று நின்றதைக் கண்டனர். மேலும் அந்தப் பகுதி செல்போன் டவரை ஆய்வு செய்த போது, ஒரு செல்போன் நம்பர் அந்த பகுதியில் அதிக நேரம் பேசியதாகத் தெரியவந்தது. பின்னர் கார் மற்றும் செல்போன் எண் இரண்டுமே ஒரே நபருக்குச் சொந்தமானது என்பதை அறிந்த போலீஸார், அதை வைத்து விசாரணையை தீவிரப் படுத்தினர்.
இந்நிலையில், அந்த நபர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து கார்த்திகேயனை காவல்துறையினர் பிடித்து பாளையங் கோட்டை ஆயுதப் படை மைதானத்தில் விசாரணை நடத்தினர். இதில் தான் குற்றவாளி என அவர் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலையைச் செய்ய யார் எல்லாம் பயன்படுத்தப் பட்டார்கள், அவர்கள் யார் என்பது குறித்தும் கார்த்திகேயனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்!
சங்கரன்கோவில் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட இரு முறை 50 லட்சம் வரை பணம் கொடுத்தும் சீட் கிடைக்காத விவகாரத்தில் இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்று இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கூலிப் படையினரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர். இந்தக் கொலை தொடர்புடைய 4 பேரை இரவிலேயே கைது செய்துள்ளாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.