
காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், 6 போலீசாருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மறுநாள் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி காவலர் பவுன்ராஜ், தலைமைக் காவலர் முனாப், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை போலீசார் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார் ஆகியோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் கொலைக் குற்றச்சாட்டு மற்றும் வன்கொடுமை தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் சிபிசிஐடி போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி தாக்கல் செய்துள்ளார்.
127 சாட்சிகளின் வாக்கு மூலங்கள், 290 ஆவணங்களுடன் சேர்த்து, 1000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில் 64 சான்றுப் பொருட்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.