சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. சினிமாத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் தனலட்சுமியிடம் முகவரி கேட்டு நிறுத்தியுள்ளார். பின்னர் திடீரென தனலட்சுமி கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி சங்கிலியைப் பறித்துள்ளார். கொள்ளையன் பறிக்கும் போது 2 துண்டான சங்கிலியின் ஒரு பகுதி கொள்ளையன் கையிலும் மற்றொரு பகுதி தரையிலும் விழுந்துள்ளது.
தரையில் விழுந்த சங்கிலியினை தனலட்சுமி எடுத்துவிட்டார். அதனைப்பார்த்த கொள்ளையன் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி தனலட்சுமியிடம் இருந்த ஒரு பாதி சங்கிலியை கேட்டு மிரட்டியுள்ளார்.அதனை தரமறுத்ததால் கத்தியால் தனலட்சுமியின் கையை வெட்டியுள்ளார் கொள்ளையன்.கொள்ளையன் வெட்டியதில் தனலட்சுமியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆனாலும் தனலட்சுமி துணிச்சலுடன் கொள்ளையனை தப்பிக்க விடாமல் அவனது கையை பிடித்துக்கொண்டு போராடியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து கொள்ளையனை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறை கொள்ளையனிடம் விசாரணை செய்து கைது செய்தனர். கொள்ளையன் கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.