சேலம் : மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடியை எட்டி உள்ளது.
ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் ஒகேனக்கலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 5 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணியில் நீர்மட்டம் 129 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 20,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கேஆர்எஸ் நிரம்பி வருவதால் விநாடிக்கு 1.51 லட்சம் கனஅடி நீர் திறக்கப் பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.62 அடியாக உயர்ந்துள்ளது. ஞாயிறு நேற்று அணை நீர்மட்டம் 67 அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 15 அடி உயர்ந்து அணை நீர்மட்டம் 82.62 அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 44.61 டிஎம்சி.,யாக உள்ளது.
இதே போன்ற நீர்வரத்து இருந்தால் திங்கள் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும். ஆனால், கர்நாடகாவில் மழை அளவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று வரை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தண்ணீர் திறக்கப் படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கர்நாடக – தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திங்கள் இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 2.15 லட்சம் கன அடியில் இருந்து 2.35 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.