அதிமுக முதல் எம்.பி.மாயத்தேவர் உடல் நலக்குறைவால் மறைவு..

Published:

mgrmayadevar - 2026

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் சின்னாளப்பட்டியில் காலமானார். அவருகு வயது 88.

பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி தம்பதிக்கு 15-ம் தேதி அக்டோபர் 1935-இல் உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர், பள்ளிக் கல்வியை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல் நிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், சட்டக்கல்வியை சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகறிஞராக பணிபுரிந்தவர். திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர் கருத்து வேறுபாடுகள் காரணமாக 14.10.1972-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அதிமுக-வை தொடங்கிய எம்ஜிஆர். தன் அரசியல் பலத்தை ஆழம் பார்க்கவும், அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு பாடம் புகட்டவும் தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் தொகுதி எம்.பி.யான திமுக-வைச் சேர்ந்த ராஜாங்கம் மரணமடைய இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இத்தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்தது. அதிமுக சார்பில் வழக்கறிஞரான மாயத்தேவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆளும் கட்சியான திமுக வுக்கு தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி ஒருபுறம் இருந்தாலும் அதிமுக வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அதிமுக வேட்பாளர் மாயத்தேவரிடம் 16 சின்னங்களைக் காட்டிய அரசு அதிகாரிகள், அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்துக் கொள்ளுமாறு கூறினர். அப்போது, இரட்டை இலை சின்னத்தை தேர்வு செய்த மாயத்தேவர், இச்சின்னம் வெற்றியை குறிக்கும் என்றும் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் எம்ஜிஆரிடம் கூறினார். இதனை எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்டார். பின்னர் இரட்டை இலையே அதிமுகவின் சின்னமாக ஆகிபோனது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1973 மே 20- தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.அதிமுக வேட்பாளர் 2.6 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தார். ஆளும் கட்சியான திமுக 93 ஆயிரத்துக்கும் சற்று அதிக வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது. ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்எஸ்வி சித்தனுக்கு இரண்டாம் இடம் கிடைத்திருந்தது. அந்த வகையில் அதிமுகவுக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்தவர் மாயத்தேவர் ஆவர் என்றால் மிகையல்ல.

பின்னர், அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். அப்போதும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார். கடந்த 15 வருடங்களாக அரசியலை விட்டு விலகி இருந்து வந்தார். இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். காலமான மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், கே.எம்.வெங்கடேசன், கே.எம்.சுமதி, கே.எம். செந்தில் குமரன் என்ற மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் கே.எம்.வெங்கடேசன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை புதன்கிழமை நடைபெற இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
85226161 559556531312196 1748645644794331136 n - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img