
இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்து ராமேஸ்வரம் அருகே கடலில் வீசப்பட்ட சுமார் 17.74கிலோ தங்கத்தை கடற்படை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த கடத்தலில் ஈடுபட்ட மூவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் இருந்து மண்டபம் கடற்பகுதிக்கு படகு மூலம் ஏராளமான தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடலோரக் காவல்படையின் ஹோவர் கிராஃப்ட் ரோந்து படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் இரு நாட்களுக்கு முன்பு கடலில் ரோந்து சென்றனர்.
மண்டபம் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து படகை பார்த்ததும் பைபர் படகில் இருந்த 3 பேர் ஒரு பார்சலை கடலில் தூக்கி எறிந்தனர். இதையடுத்து, படகில் இருந்த 3 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது 3 பேரும் இலங்கையில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்ததாகவும், மண்டபம் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் கடலில் எறிந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து மன்னார் வளைகுடா கடலில் வீசிய தங்கம் கொண்டுவந்த பார்சலை கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் நீச்சல் பிரிவு வீரர்கள் மண்டபம் தீவிரமாகத் தேடிவந்தனர்.
தேடலின் முடிவில் ஆழ்கடலில் வீசப்பட்ட 17.74 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ. 10. 5 கோடி என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய கடற்படையின் ஐசிஜி குழுவினர் டைவிங் ஆபரேஷன் நடத்தி, கடலுக்கு அடியில் இருந்து 17.74 கிலோ தங்கத்தை மீட்டெடுத்தனர். தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 3 நபர்களையும் கைது செய்த அதிகாரிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் குறித்து தீவிர விசாரணையையும் நடத்தி வருவதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதியில், கடத்தல் தங்கத்தை வீசிச் சென்றது தொடர்பாக 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட வேதாளை பகுதியைச் சேர்ந்த சாதிக் அலி, அசாருதீன், மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜஹாங்கீர் அப்பாஸ் ஆகிய 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர்.




