தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்கும் இபிஎஸ்,ஓபிஎஸ் அணியினர்..

Published:

757357 ops epd - 2026

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கினார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 63 பேரின் ஆதரவையும், மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவை தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளரானார்.

இதுபற்றி தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றியும் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆதரவு இருப்பது பற்றியும் உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அந்த பொதுக்குழுவே செல்லாது. கட்சியின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள்.

இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. கோர்ட்டு மூலம் கட்சி அலுவலகம் எடப்பாடி பழனிசாமி கைகளுக்கு வந்து விட்டது. இதற்கிடையில் தமிழக தேர்தல் அதிகாரி நேற்று நடத்திய அனைத்து கட்சி கூட்டத்துக்கு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கடிதம் அனுப்பினர். இதன் மூலம் தேர்தல் ஆணையமும் அங்கீகரிப்பதற்கான முதல் வெற்றி என்று எடப்பாடி அணியினர் கொண்டாடுகிறார்கள் இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி பெற்றார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இரு தரப்பும் கலந்துகொண்டதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது எந்த அணி? என்ற கேள்வி எழுந்தது. எந்த அணிக்கு அங்கீகாரம் என்பது தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதனால் தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக இரு அணிகளும் காத்திருக்கின்றன.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img