நள்ளிரவுக் கைதுகள்; தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேற்றம்; கெடுபிடிகள்! சபரிமலை சீனாவில் இருக்கிறதா?!

Published:

police in sabarimala - 2026சபரிமலை: சபரிமலையில் எந்த வருடமும் இல்லாத கெடுபிடிகள் இந்த முறை வெகுவாக அதிகரித்துள்ளன. பக்தர்களை ஆன்மிக அன்பர்களாக அணுகாமல் குற்றவாளிகளைப் போல் அணுகும் காவல் துறையைக் கண்டு, பக்தர்கள் வாக்குவாதம் செய்தபடி செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.

சபரிமலைக்கு இரவு 9 மணிக்குப் பின்னர் மலையேறிச் செல்லக் கூடாது என்றும், அதிகாலை 2 மணிக்குப் பின்னரே மலை ஏற அனுமதிக்கப் படுவர் என்றும் காவல்துறையினர் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

மலைக்கு மேல் ஏறிய பின்னர், சந்நிதியிலோ சந்நிதி மண்டபங்களிலோ எந்த நேரத்திலும் தங்கியிருக்கக் கூடாது என்று கட்டாயப் படுத்தி, அனைவரையும் உடனே கீழே திருப்பி அனுப்புகிறார்கள். கிட்டத்தட்ட நிலக்கல்லில் இருந்து பலரும் நடந்து சென்று பம்பைக்குப் பயணமாகி, பின்னர் பம்பையில் இருந்து சந்நிதானம் வரை மலையில் ஏறிவிட்டு, கால் கடுக்க நின்று தரிசனம் முடித்ததும், சற்று நேரம் ஓய்வு எடுக்கவோ, அமரவோ கூட அவகாசம் அளிக்காமல் உடனே அங்கிருந்து அவர்களை அப்புறப் படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகளுடன் உடனே கீழே அனுப்பப் படுகிறார்கள்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இது தொடர்பாக பக்தர்களுக்கும் காவல் துறையினருக்கும் அங்கங்கே வாக்குவாதங்களும் எழுந்து வருகின்றன. தமிழகம், கேரளம், கர்நாடகம் என மாநில வித்தியாசங்கள் எதுவும் பாராமல், அனைவரையும் திருப்பி அனுப்புவதிலேயே கவனமாக செயல்படுகிறது காவல்துறை.

police kerala - 2026
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வைரல் படம்…

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் ஐயப்ப பக்தர்கள் 80 பேரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர். தற்போது, போராட்டங்கள் சில இடங்களில் நடத்தப் பட்டுவருவதால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 18ஆம் படிக்கு அருகே நடைபந்தல் பகுதியில் பக்தர்கள் சிலர் தங்க முயன்றுள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை வெளியேறும்படி அறிவுறுத்தினர்.
போலீசாரின் இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்த்து அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, வெளியேற்றினர்.

இது குறித்து மலப்புரம் எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், சன்னிதானம் பகுதியில் 144 தடை அமலில் உள்ளதால் அவர்களை அங்கே தங்கக் கூடாது என்றோம். மறுத்ததால், வேறு வழியின்றி அவர்களை கைது செய்தோம். ஹரிவராசனம் பாடப்பட்ட பிறகு அங்கிருந்து கலைந்து போகும்படி கூறினோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். பக்தர்கள் அவர்கள் விருப்பம் போல் வழிபாடு நடத்தி விட்டு செல்லலாம். அதே சமயம் விதிகளை மீறக் கூடாது. வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கவே 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

kerala sabarimala water - 2026

பக்தர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக., ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு, கொச்சி, கொல்லம், ஆலப்புழா, தொடுபுழா, மலப்புரம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதலே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இன்றும் போராட்டங்கள் தொடர்வதால், கேரளத்துக்குச் செல்லும் பஸ்கள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப் பட்டன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img