Home Blog Page 5883

ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் போராட்டம் : விஜயகாந்த்

 
ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் விஜயகாந்த் வீட்டு முன் போராட்டம் நடத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? அதை பாதுகாக்க வேண்டிய காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறதென தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக பத்திரிக்கையாளர்கள் என்கின்ற பெயரில் ஜெயா டிவியை சார்ந்தவர்களுடன் அதிமுகவினரும், சமூக விரோதிகளும், ஒன்று சேர்ந்து தேமுதிக தலைமை கழக அலுவலகத்தை முற்றுகையிட வருவதும், எனது வீட்டை முற்றுகையிட வருவதுமென தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தார்கள். மேலும் தரக்குறைவான மற்றும் ஆபாச வார்த்தைகளாலும் கடுஞ்சொற்களாலும் கோஷமிட்டனர்.
காவல்துறையிடம் இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் எனது இல்லத்திற்கு அருகிலேயேதான் காவல் நிலையமும் இருக்கிறது.
காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் இன்று (31.12.2015) காலை தேமுதிகவின் தலைமை நிலைய செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ப.பார்த்தசாரதி மற்றும் வழக்கறிஞர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரும் எனது வீட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் மனு அளிக்க விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தனர். புகார் அளிக்க வந்தவர்களில் வழக்கறிஞர்களை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தனது வீடு மற்றும் தேமுதிக அலுவலகம் அருகில் அதிமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டின்முன், அறப்போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர தனக்கு வழியேதும் தெரியவில்லை என விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனது வீடு மற்றும் கட்சி அலுவலகம் அருகாமையில் போராட்டம் நடத்த காவல்துறை எப்படி அனுமதித்தது? இது முழுக்க முழுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்துவதற்கு வள்ளுவர்கோட்டம், கலெக்டர் அலுவலகம், சேப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களின் அருகில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் எனக்கு எதிரான போராட்டங்கள் மட்டும் எனது வீடு மற்றும் கட்சி அலுவலகம் அருகில் நடத்துவதற்கு காவல்துறை எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி கொடுத்தது.
அதிமுகவினர் நடத்திய போராட்டத்தை நிறுத்துவதாக சொல்லி அறிக்கை வெளியிட்டு நாடகமாடிய முதலமைச்சர் ஜெயலலிதா, பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் பிரச்சனையை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார். இதுதான் அவர் சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடா? எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்கின்ற கடமை உணர்வும், கண்ணியமும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இல்லையா? இப்பிரச்சனையில் காவல்துறை தனது கடமையிலிருந்து தவறியதாகவே தெரிகிறது. காவல்துறை போராட்டம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டு, தேமுதிகவினரை வன்முறை செய்வபவர்களாக தமிழக மக்களிடம் சித்தரிப்பதற்காகவே, கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் வீட்டின் அருகிலே இதுபோன்று போராட்டத்தை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளிக்குமா? மழை வெள்ள பாதிப்பால் இந்த ஸ்டிக்கர் அதிமுக அரசின் மீது, மக்கள் மிகுந்த அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதை மறைப்பதற்காகவே, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் இதுபோன்ற போராட்டங்கள் எனக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படுவதாக தெரியவருகிறது. இந்த நிலை தொடருமானால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டின்முன், நான் அறப்போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எனக்கு வழியேதும் தெரியவில்லை. எனவே இதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 

ஆங்கில புத்தாண்டு 2016 : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

 
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பிறக்கப் போகும் 2016 ஆண்டிற்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி
வெளியிட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், மலர்கின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
 
மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாகவும் அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
தமிழக மக்களுக்குத் தொடர்ச்சியாக வேதனைகளைத் தந்த 2015ஆம் ஆண்டு மறைந்து புதுவாழ்வு தந்திடப் பொங்கி வருகிறது 2016 ஆங்கிலப் புத்தாண்டு!
 
தி.மு.க. அரசு அன்று உருவாக்கி 2015இல் பயன் தந்த மெட்ரோ இரயில் திட்டம், மின்சாரப் பிரச்சினையைத் தீர்த்த வடசென்னை, மேட்டூர், வல்லுனர் மின் திட்டங்கள் போன்ற பல்வேறு புதிய திட்டங்கள் மீண்டும் உருவாக தொழில் வளம் சிறக்க-அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணி நீர்வளம் பெருக்க-விவசாயம் செழிக்க- தமிழகம் வளமும் நலமும் பெற-அனைத்திற்கும் வாயிலாக ஆட்சி மாற்றம் காண வருகிறது ஆண்டு 2016 என்பதை நினைவுபடுத்தி, தமிழக மக்களுக்கு எனது உளமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
புத்தாண்டு எப்போதும் நம்பிக்கையுடன் தான் பிறக்கிறது என்ற போதிலும், பல நேரங்களில் அது ஏமாற்றத்தில்தான் முடிகிறது. 2015 ஆம் ஆண்டையும் நம்பிக்கையுடன் தான் வரவேற்றோம்; ஆனால், அது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எண்ணற்ற ஏமாற்றங்களைத் தந்ததுடன், கடைசி நேரத்தில் வெள்ளத்தின் வடிவில் மிகப்பெரிய சோகத்தையும், சேதத்தையும் பரிசாக அளித்துச் சென்றிருக்கிறது. ஆனால், 2016 ஆம் ஆண்டு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து காயங்களுக்கும் நிச்சயமாக 2016 ஆம் ஆண்டு மருந்து தடவும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழகத்தின் இன்றைய நிலையை மாற்றவேண்டும் என்றால் 2016 ஆம் ஆண்டில் முதலில் மாற்றமும் அடுத்து முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதற்காக இந்த ஆங்கிலப் புத்தாண்டு நாளில் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
புதிய வாய்ப்புகளும், சம உரிமைகளும், வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படுமென ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் மக்கள் நம்பிக்கையோடு புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகிறோம். எந்தாண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு கொட்டித் தீர்த்த கனமழையால் தமிழகத்தின் தலைநகரே சிதைந்துபோனது. பல மாவட்டங்களில் பொதுமக்களின் உடைமைகள், தொழில், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இன்று (01.01.2016) புத்தாண்டு பிறக்கிறது.
 
மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மனதில்கொண்டு புத்தாண்டை ஆடம்பரமாக கொண்டாடுகின்ற பல அமைப்புகள், விடுதிகள் போன்றவைகளெல்லாம் அதை ரத்து செய்துள்ளன. எனவே புத்தாண்டு தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடாமல், இதுவரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனிமேல் நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்கின்ற தொலைநோக்குச் சிந்தனையோடு, புதியதாய் பிறக்கும் 2016 புத்தாண்டை வரவேற்று, மிகுந்த மகிழ்ச்சியோடு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம்.
 
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கஷ்டங்கள் நீங்கி, இருள் சூழ்ந்துள்ள அவர்களது வாழ்வில், இன்றிலிருந்தாவது ஒளி வெள்ளம் ஏற்படட்டும். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகலட்டும், தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையட்டும். 2016ல் தமிழகத்தில் அமையும் புதிய ஆட்சியில், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

விஜயகாந்தின் தூண்டுதலின் பேரில் தே.மு.தி.க. தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல் : பார்த்தசாரதி எம்.எல்.ஏ உள்பட 20 பேர் கைது

 
சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் ஊடக துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்கள? என்று ஊடக துறையினரை அவமதிக்கும் வகையில்தூ என காறித் துப்பினார்.
இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகத்தில் ஊடக துறை சார்ந்த சங்கங்கள் விஜயகாந்துக்கு எதிராக காவல் துறைனரிடம் புகார் மனு அளித்தும், ஒரு சில சங்கங்கள் விஜயகாந்தை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்தை கண்டித்து அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த இன்றும் செய்தியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த சென்றனர்.
விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் திரண்ட செய்தியாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் தே.மு.தி.க. தொண்டர்கள் பார்த்தசாரதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அங்கு திரண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது.
இதையடுத்து தே.மு.தி.க.வினர் செய்தியாளர்களை விரட்டி விரட்டி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தே.மு.தி.க.வினரை தடுக்க முயன்றனர். அதையும் தாண்டி சென்று தே.மு.தி.க வினர் அத்துமீறி சென்று தாக்கினர். மேலும்செய்தியாளர்களின் வாகணத்தையும் அடித்து நொறுக்கினர்
இதில் பத்திரிகையாளர்கள் 3க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தே.மு.தி.க. வினரை விரட்டியடித்தனர்.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தே.மு.தி.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பார்த்த சாரதி உள்பட தே.மு.தி.க. தொண்டர்கள் 20 பேரை கைது செய்தனர்.
விஜயகாந்தின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தே.மு.தி.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பார்த்த சாரதி பத்திரிகையாளர்களை வீடு புகுந்து தாக்கப் போவதாகவும் ஏற்கனவே மிரட்டியவர் என்பது குறிப்பிடதக்கது.
விஜயகாந்தின் தூண்டுதலின் பேரில் தே.மு.தி.க. தொண்டர்கள் செய்தியாளர்களை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்திய காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
 
ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை விதித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. பொது இடங்களில் நாகரிகமாக உடை அணிவது பண்பாடு. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்தால் நடை, உடை, பாவனை மாறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் கேந்திரமாக விளங்கும் இந்து கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதிப்பது அவசியமானது. நமது பண்பாட்டில் ஊறிய விஷயங்கள் மாறிப்போகும்போது சட்டத்தின் துணைகொண்டு இதனை செயல்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. 
 
ஆடைக் கட்டுப்பாட்டை அறநிலையத்துறை முழுமையாக நிறைவேற்ற, மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சுற்றுலாத் தலமாக, யாத்திரைத் தலமாக விளங்கும் முக்கிய ஊர்களில் இது குறித்து மக்களின் கவனத்தை கவரும் வகையில் விளம்பரப் படுத்த வேண்டும். அங்கு மக்களுக்குத் தேவைப்பட்டால், உடை மாற்றும் இடம், வாடகைக்கு தூய்மையான உடை முதலானவை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
 
மேலும், வருகின்ற ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டில் நள்ளிரவில் ஆலயங்கள் வழிபாட்டிற்குத் திறப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது. நள்ளிரவில் தனியார், அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் திறக்கக்கூடாது என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மார்கழி என்பதால் விடியற்காலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்படும். அப்போது குடும்பத்தோடு வந்து வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து கிறிஸ்தவ சர்ச் போல நள்ளிரவில் கோயில் திறப்பது என்பதை இந்து முன்னணி வன்மையாக் கண்டிக்கிறது. மீறித் திறந்தால் இந்து முன்னணி  ஜனநாயக வழியில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
ஜனவரி 1இல் ஜன்னி காய்ச்சல் வந்ததுபோல நள்ளிரவில் இளைஞர்களும் இளம்பெண்களும் வீதியில் உலாவதை காவல்துறை தடுக்க வேண்டும். குடித்துவிட்டு கும்மாளமிடுவதையும், வாகனம் ஓட்டுவதையும், பைக் ரேஸ் போன்றவை ஆபத்தான விஷயங்கள் நடத்துவதும் சட்டவிரோதம் என எச்சரிக்கை விளம்பரம் செய்ய வேண்டும். மீறுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நள்ளிரவில் பட்டாசு வெடிப்பதை உச்சநீதி மன்றம் தடை செய்துள்ளது. மீறி வெடி வெடிப்போர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
மக்களின் முழுமையானப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்களும் ஜனவரி 1இல் நடைபெறும் கலாச்சார சீரழிவு குறித்தத் தகவல்களை காவல்துறைக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

குவைத்தில் மரணம் அடைந்த வாலிபரின் சடலத்தை பெற்று தர மாவட்ட ஆட்சியரிடம் மனு

 
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மனைவி சந்திரம்மாள், மாவட்ட ஆட்சியர் ஞானசேகரனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது :-.
கடந்த ஓராண்டாக எங்களது மகன் பாலாஜி, 28, குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதில் மரணமடைந்ததாக, அவருடன் பணிபுரியும், பிரபாகரன் என்பவர் தகவல் தெரிவித்தார்.
குவைத்தில் மர்மமான முறையில் இறந்த, என் மகனின் உடலை, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் .

தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமை கொண்டவர் ஜெயலலிதா !! எதிர்க்கட்சிகள் ஒப்புதல் !!

 

எதிர்க்கட்சி தலைவர்களிடம் செய்தியாளர்கள் எந்த ஒரு கேள்வியை கேட்டாலும், இதே கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நீங்கள் கேட்க முடியுமா என எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

இதன்மூலம் ஓர் உண்மை தெளிவாக தெரிய வருகிறது.

அது, தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தி, ஆளுமை ஜெயலலிதாதான் என்பதுதான்.

இதை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள்.

அவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அப்படிதான் நினைக்க தோன்றுகிறது.

உண்மையிலேயே, தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தி ஜெயலலிதாதான்.

இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.

கனமழை, வெள்ளத்திற்கு பிறகு, அதிமுகவின் செல்வாக்கு வெகுவாக குறைந்தபோது, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை தனியாக எதிர்த்து நிற்க திமுகவிற்கு இன்னும் துணிச்சல் வரவில்லை.

தேமுதிக போன்ற கட்சிகளின் தயவை நாடி திமுக சென்றுக் கொண்டிருக்கிறது.

கூட்டணியில் சேர வருமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.

இதன்மூலம், அதிமுகவை தனித்து சந்திக்க முடியாது என்பது அவருக்கு தெரிகிறது.

அந்த கிலியில்தான், கூட்டணியில் சேர வாருங்கள் என ஒவ்வொரு கட்சியையும் கூவி கூவி அழைக்கிறது திமுக.

இப்படிப்பட்ட நிலையில், இன்று (31.12.2015) கூடும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து அனைவரும் வியக்கும் வகையில் ஜெயலலிதா துணிச்சலான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ஆளும் கட்சி மீது பல்வேறு புகார்கள் இருந்தும், தேர்தலை துணிச்சலுடன் சந்திக்கும் மனநிலை, தைரியம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருக்கிறது.

எந்த ஒரு கட்சியையும், கூட்டணியில் சேர வாருங்கள் என இதுவரை அதிமுக அழைக்கவில்லை.

இனியும் அழைக்காது என்றே தெரிகிறது.

அந்த அரசியல் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.

அதனால்தான், தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக, ஆளுமை கொண்டவராக அவர் கருதப்படுகிறார்.  இனியும் கருதப்படுவார்.

 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்,
பத்திரிகையாளர்.

செய்தி பதிவை இப்படி சமூக ஊடகங்களில் தவறாகப் போட்டால் காறித் துப்பாம விடுவாங்களா ? என்னமா சொல்லுறீங்க ?

 
சென்னை அடையாறு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் ஊடக துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டு நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்கள? என்று தூ என காறித் துப்பினார்.
இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகத்தில் ஊடக துறை சார்ந்த சங்கங்கள் விஜயகாந்துக்கு எதிராக காவல் துறைனரிடம் புகார் மனு அளித்தும், ஒரு சில சங்கங்கள் விஜயகாந்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் இன்று விஜயகாந்தை கண்டித்து அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தியை தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தலைமையகம் என்ற முகனூல் பக்கத்தில் புகைப்படங்களுடன் செய்தி பதிவின் ஆரம்பத்திலேயே தவறான அர்த்தம் கொ(ல்)ள்ளும்படி
( தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் ( TUJ ) சார்பில், விஜயகாந்தை அநாகரிகமாக நடந்து கொண்டார் ) என வார்த்தை அமைப்பை உருவாக்கி பதிவிட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முகனூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது :-.
 
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் ( TUJ ) சார்பில், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி அநாகரிகமாக நடந்து கொண்ட தழிழக எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தை கண்டித்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
images india untitled - 2026
ஆர்ப்பாட்டத்திற்க்கு TUJ மாநில தலைவர் தோழர் DSR சுபாஷ் அவர்கள் தலைமை தாங்கினார் .
நெற்றிக்கண் ஆசிரியர் A.S. மணி முன்னிலை வகித்தார் .TUJ மாநில துணை பொது செயலாளர் கொழுமம் V.தாமோதரன் ,TUJ சட்ட ஆலோசகரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் Dr.D.சிவசங்கரன் வழக்கறிஞர், TUJ நிர்வாகிகள் கழுகு K. ராஜேந்திரன், பிரஸ் குமார், S.J ஜெனர்தனம், விஸ்வரூபம் K.R.கணேஷ், பீப்புல் டுடே G. சத்தியநாராயணன், கழுகு வீரராகவன், நரிஅரி கிருஷ்ணமூர்த்தி, அனந்தராமன், தர்மபுரி சசிகுமார், சித்ரா ரவீந்தரன், ஜெயஸ்ரீ, அம்பத்தூர் வினோத்குமார், ,சக்திவடிவேல் மற்றும் 100 க்கும் மேற்ப்பட்டTUJ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை அனைத்து ஊடகத்துறையைச் சார்ந்த செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தி சேகரித்தனர்
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு விருகம்பாக்கம் காவல்துறையை சேர்ந்த ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் .
செய்தி :- பாடி பா.கார்த்திக்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர். என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
தவறான அர்த்தம் கொ(ல்)ள்ளும் படியாக வார்த்தை அமைப்பை உருவாக்கி பதிவிடபட்ட பதிவு சிவப்பு குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது .
செய்தி பதிவை இப்படி தவறாகப் போட்டால் காறித் துப்பாம விடுவாங்களா ? என்னமா சொல்லுறீங்க?

தொழிலாளர் புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை:
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

”தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது. அனைத்து மாநிலங்களும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை அந்தந்த மாநில அரசே நிர்ணயித்துக் கொள்கிறது. தற்போது, மத்திய அரசு தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய சட்டத்தை கொண்டுவர உள்ளது.

இந்த ஊதியச் சட்ட திருத்தத்தில் மத்திய அரசு பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரம், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, மருத்துவம், விடுப்பு, இன்சூரன்ஸ், இஎஸ்ஐ போன்றவற்றை உறுதிப்படுத்திடும் வகையிலும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டும் இந்த புதிய ஊதியச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் உழைப்பின் மூலமே தொழில் வளர்ச்சி பெறும், தொழில்களும் பெருகும், நாடும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும். எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய ஊதிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்”

சென்னை கோவை நெல்லை உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை:

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளையும், நவீன வசதிகளையும் கொண்ட 100 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ.48 ஆயிரம் கோடி செலவிட மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டிய ‘ஸ்மார்ட்’ நகரங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் 12 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் அமையவிருக்கும் ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான வரைவு அறிக்கையை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

ஆனால் தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்பு இருந்ததால், திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த பட்டியலை மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அளித்துள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள இந்த வரைவுகளை தலா 2 நிபுணர்கள் கொண்ட 3 குழுக்கள் மூலம் மத்திய அரசு ஆய்வு செய்யும். பரிசீலனையின் முடிவில் இந்த நிதி ஆண்டில் நிதி உதவி அளிக்கப்படும் ‘ஸ்மார்ட்’ நகரங்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.

ரூ. 195.43 கோடி இதுவரை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரவு

 
 
தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 195.43 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
நிவாரண நிதிக்கு குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
கடந்த மாதம் சென்னையை தாக்கிய கடும் வெள்ளம் காரணமாக,பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நிர்க்கதிக்கு ஆளானார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நேற்று மட்டும் 25.76 கோடி ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள்பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வெள்ள நிவாரண நிதிக்காக முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை துணைத் தலைவர் டாக்டர் எம். தம்பிதுரை, அனைத்திந் திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவைத் குழுத் தலைவர் ஏ. நவநீத கிருஷ்ணன் ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர் .
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப. தனபால் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சரும், அவை முன்னவருமான ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் அவர்கள், அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன் ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவை முன்னவர், பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோரின் ஒரு மாத சம்பளத் தொகையான 75 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர் . .
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்கு நர் என். சந்திரசேகரன் 10 கோடி ரூபாய். அப்பல்லோ மருத் துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி 3 கோடி ரூபாய். 5.சுந்தரம் பாஸ்ட் னர்ஸ் லிமிடெட் நிறுவனத் தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர் . .
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பி. அசோக், நிறுவன மேலாண்மை இயக்குநர் கௌதம் ராய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி. மன்னூர், சிபிசிஎல் நிறுவனத்தின் இயக்குநர் (நிதி) எஸ். கிருஷ்ண பிரசாத் ஆகியோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 3 கோடி ரூபாய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 44 லட்சத்து 32 ஆயிரத்து 486 ரூபாய் வழங்கியுள்ளனர் . ,
சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பில் 1 கோடி ரூபாய், சிபிசிஎல் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 32 லட்சத்து 72 ஆயிரத்து 560 ரூபாய், என இதுவரை வழங்கப்பட்ட தொகை 195 கோடியே 43 லட்சத்து 61 ஆயிரத்து 563 ரூபாயாகும் என்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.