Home Blog Page 6118

சத்யம் வழக்கு: ராமலிங்க ராஜுவுக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5 கோடி அபராதம்

ஹைதராபாத் : சத்யம் நிறுவன மோசடி வழக்கில் அதன்நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கம்பெனியின் கணக்கு வழக்குகளில் மோசடி செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், ராமலிங்க ராஜுக்கு ரூ. 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று காலை 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனையை பிற்பகலில் வழங்குவதாக அறிவித்தது. 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராமலிங்க ராஜு ஏற்கெனவே 32 மாதங்கள் சிறையில் இருந்துள்ளதால், இன்னும் 52 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும்.

ஹனீபா மறைவுக்கு இ.கம்யூ. இரங்கல்

ஹனீபா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளை தனது பாடல்கள் மூலம் பரப்பி வந்தவரும். தமிழ்நாடு முன்னாள் மேலவை உறுப்பினறுமான நாகூர் அனிபா மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பதார்களுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறன். நாகூர் அனிபா அவர்கள் பகுத்தறிவு கொள்கைகளுக்காகவும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் குரல் எழுப்பியவர். தி.மு.கவின் அரசியல் கருத்துகளையும் பொதுவான நல்ல கருத்துகளையும் பாடலாக்கி, மெட்டுமைத்து இசை இசைத்து பாடியதிறன் மிக்கவர். தனது பாடல், இசை திறனானல் சிங்கபூர், மலேசியா என உலக தமிழர்களால் அறியப்பட்டவர். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழக கலை உலகத்திற்கும் பேரிழப்பாகும். – என்று கூறியுள்ளார்/

நாகூர் ஹனீபாவின் சமூக நல்லிணக்கப் பாதை போற்றுதற்குரியது: திருமாவளவன்

நாகூர் அனிபாவின்  சமூக நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதே இளைய தலைமுறையினர் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி என்றுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி…
 இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீபா.  நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் நேசத்திற்குரியவர். கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர்.
தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பாடல்கள் ஒலிக்காத திசைகளே இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை. அவரது பாடல்கள் மதம் கடந்து சாதி கடந்து அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்தவையாகும். இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் இந்து மக்களால் கொண்டாடப்பட்ட பாடலாகும்.
தமிழகத்தில் சமயப் பூசல்கள் இன்றி சமூகங்களுக்கு இடையே அன்பும் அமைதியும் நிலவுவதற்கு ஹனீபாவும் ஒரு காரணம். தவத்திரு குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம் போன்ற மடாதிபதிகளுடன் நட்புடன் இருந்து, இறுதி மூச்சுள்ளவரை சமூக நல்லிணக்கத்தைப் போற்றி வந்துள்ளார். அவருடைய இழப்பு சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற ஒரு பேரிழப்பாகும். அவர் வளர்த்த சமூக நல்லிணக்கப் பாதையில் இளைய தலைமுறையினர் பயணிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றுகூறியுள்ளார்.

ஜெயகாந்தனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்: திருமாவளவன்

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு  நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 உலகறிந்த எழுத்தாளரும் ஞானபீட விருதுபெற்றவருமான ஜெயகாந்தன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவு தமிழ் மொழிக்குப் பேரிழப்பாகும்.  அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தமிழ் இலக்கியத்தின் எண்ணற்ற படைப்களை எழுதிக் குவித்தவர்.  தமிழ்த் திரையுலகிலும் புதுமையான திரைப்படங்களை உருவாக்கி தனி முத்திரை பதித்தவர்.  மனதில்பட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் மிக்கவர். தமிழ் இலக்கியவாதிகளுக்கு மதிப்பை உருவாக்கியவர். திரு.ஜெயகாந்தன் அவர்களைப்போல தமிழ் இலக்கிய உலகில் இன்னொருவரைச் சுட்டிக்காட்ட முடியாது.
 சமூகத்தில் விளிம்புநிலை மாந்தர்களை உயிர்த்துடிப்போடும் சுயமரியாதையோடும் தனது படைப்புகளில் அவர் சித்திரித்தார்.  எவரும் எழுதத் துணியாத கருத்துகளை இலக்கியங்களாய்ப் படைத்தார்.  குறிப்பாக, அவர் படைத்துக்காட்டிய பெண் பாத்திரங்கள் தனித்துவம்கொண்ட ஆளுமைகளாக விளங்குவதைக் காணலாம்.
தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பல்வேறுவகையான அடிமைத்தனம் சார்ந்த மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்தியவர் ஜெயகாந்தன்.  அந்த வகையில் அவரை தந்தை பெரியாரின் இலக்கிய வாரிசு எனக் குறிப்பிடலாம்.
திராவிட இயக்கத்தின் மீதும் இடதுசாரித் தத்துவத்தின் மீதும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் காழ்ப்புணர்வின் அடிப்படையிலானவை அல்ல.  மாறாக, சமூகப் பொறுப்புணர்விலிருந்தே செய்யப்பட்டவை என்றுதான் கருதப்பட வேண்டும்.  அதனால்தான் அவரோடு திராவிட இயக்கத் தலைவர்களும் இடதுசாரி அமைப்புகளின் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் எப்போதும் மதிப்போடு நட்பு பாராட்டி வந்தனர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டு மறக்கத்தக்கதல்ல.  அதை அங்கீகரிக்கும்வகையில் அவருக்கு நினைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட வேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.  அத்துடன், தமிழக அரசு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு சென்னையில் நினைவு மண்டபம் ஒன்றை எழுப்ப வேண்டும் எனவும், அவரது பெயரில் விருது ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

நாகூர் ஹனீபா மரணம்: சீமான் இரங்கல்!

நாகூர் ஹனீபா மரணத்துக்கு  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இரங்கல்தெரிவித்துள்ளார்.

அதில்,

கணீர்க் குரலால் தமிழுலகைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பாடகர் அய்யா நாகூர் ஹனீபா அவர்கள். தந்தை பெரியாரின் பற்றாளராக அறிஞர் அண்ணாவின் வார்ப்பாக திராவிட இயக்கத்தில் காலூன்றிய அய்யா ஹனீபா அவர்கள், தன்னுடைய தனித்த குரலால் தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ‘இறைவனிடம் கையேந்துங்கள்… அவர் இல்லையென்று சொல்லுவதில்லை…’, ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை உரக்கக் குரலில் பாடி ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் தனது கருத்தைக் கொண்டு சென்றவர் அய்யா ஹனீபா அவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமெடுத்த காலகட்டத்தில் தனது குரலையே ஆயுதமாகக் கொண்டு போராடியவர்.

 “ செந்தமிழை மேயவந்த

    இந்தி என்ற எருமை மாடே! முன்னம் போட்ட சூடு என்ன மறந்ததோ உனக்கு? என்றும் இந்தி ஏற்கமாட்டோம் ஓடிப்போ வடக்கு!”

என அய்யா பாடிய உணர்ச்சிமிகு பாடலைத் தமிழுலகம் என்றைக்கும் மறக்காது. சிம்மக் குரலால் சீரிய கருத்துகளால் தமிழ் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த அய்யா நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு தமிழ் உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அய்யா அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. அய்யா அவர்கள் மறைந்தாலும் காற்று முழுக்கக் கலந்திருக்கும் அவருடைய கம்பீரக் குரல் என்றைக்கும் மறையாது.

என்று கூறியுள்ளார்.

புகையிலை எச்சரிக்கைப் படங்களை வெளியிட வலியுறுத்தி ஏப்.10ல் பாமக போராட்டம்

புகையிலை எச்சரிக்கைப் படங்களை 85% அளவில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதில் அக்கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் தலைமை ஏற்கிறார்.

ஜெயகாந்தன் மறைவு: ராமதாஸ் இரங்கல்

எழுத்தாளார் ஜெயகாந்தன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்….
தலைசிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தன் உடல்நலக் குறைவால் சென்னையில்  காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் ஜெயகாந்தனை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. 145 சிறுகதைகளையும், 41 புதினங்களையும் எழுதியவர். நான்கு தலைப்புகளில் தமது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்தவர். இவரது படைப்புகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒரு பாடம் நிச்சயமாக இருக்கும்.
ஞானபீட விருதையும், சாகித்ய அகாடமி விருதையும் பெற்றவர். பொதுவுடமைக் கொள்கைகளில் நம்பிக்கைக் கொண்டவர் என்ற போதிலும், காமராஜரின் அன்புக்கு பாத்திரமாகி அக்கட்சிக்காக உழைத்தவர்.
புகழின் உச்சங்களைத் தொட்டவர் என்ற போதிலும் எளிமையானவர்; யதார்த்தமானவர். எந்தக் காலத்திலும் தமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர். இவரது மறைவு இலக்கிய உலகிற்கு  ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
எழுத்தாளர் ஜெயகாந்தனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

20 தமிழர்கள் படுகொலை; பிரதமர் மௌனம் கடைபிடிப்பது ஏன்?: ராமதாஸ்

20 அப்பாவித் தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் பிரதமர் மவுனம் கடைபிடிப்பது ஏன்? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கின்றனர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் கூறிய காரணங்கள் அனைத்தும் பொய் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலையிலிருந்து சித்தூருக்கு கட்டிட பணிக்காக பேரூந்தில் சென்ற தொழிலாளர்களை கடத்திச் சென்று ஆந்திரக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். காவல்துறையிடமிருந்து தப்பி வந்த சேகர் என்பவர் இதை உறுதி செய்திருக்கிறார். எந்தவித கோபமூட்டலும் இல்லாத நிலையில்,  இக்கொடிய செயலை ஆந்திரக் காவல்துறை அரங்கேற்றியிருப்பதன் பின்னணியில் பெரிய சதி இருப்பதாகவே தோன்றுகிறது. ஆந்திரத்திலுள்ள செல்வாக்கு படைத்தவர்களில் எவருடைய ஆசையையாவது நிறைவேற்றுவதற்காக அப்பாவி தமிழர்களை அம்மாநிலக் காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
இது உண்மையாக இருந்தால் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நீர்த்துப் போகச் செய்து, உண்மையை மூடி மறைக்கவே ஆந்திர அரசு முயற்சி செய்யும். இரக்கமின்றி 20 பேர் கொல்லப்பட்டதற்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  இதுவரை வருத்தம் கூட தெரிவிக்காதது இதை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி, ஆந்திர முதல்வர் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து விளக்கமளித்திருப்பது தமது அரசின் செயல்களை நியாயப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், நியாயமான விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதை உறுதிசெய்யும் கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தான் உள்ளது. ஆனால், இந்த கொலைகள் குறித்து நம்பத்தகுந்த விசாரணை நடத்தும்படி ஆந்திர முதலமைச்சருக்கு கடிதம் எழுதியதுடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்கிக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியோ இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.
ஆந்திரக் காவல்துறை நடத்திய கொடூரக் கொலைகளுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து பிரதமர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதுபோன்ற சூழலில் இரு மாநில முதலமைச்சர்களையும் பிரதமர் தொடர்பு கொண்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதும், இரு மாநிலங்கள் தொடர்பான பிரச்சினை என்பதால் மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும்படி ஆலோசனை வழங்குவதும் தான் வழக்கம். ஆனால், ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஜப்பானியர்களும், ஆங்கிலேயர்களும் படுகொலை செய்யப்பட்டதற்கெல்லாம் கண்டனம் தெரிவித்த நரேந்திர மோடிக்கு ஆந்திர அரச பயங்கரவாதத்தால் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கவோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவோ முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
வட இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தை சேர்ந்த 20 பேர் வேறு மாநிலத்தில் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் பெரும் பிரளயமே வெடித்திருக்கும். ஆனால், கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால் இதை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் தான் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2008 ஆம் ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அதற்கு எதிராக ஒட்டுமொத்த வட இந்தியத் தலைவர்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா இதற்காக மராட்டிய மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
அக்கட்சியின் பூர்வாஞ்சல் பிரிவு இக்கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்தார். வெளிமாநிலத்தவர் மீதான தாக்குதலை பெரும் பிரச்சினையாக பார்த்த மத்திய அரசும், தேசியக் கட்சிகளின் தலைமைகளும் 20 தமிழர்கள் வெளிமாநிலத்தில் கொல்லப்பட்டதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு,  இறந்தவர்கள் தமிழர்கள் தானே என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
சென்னை முகலிவாக்கத்தில் மனிதர்களின் விதிமீறலால்  கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திலேயே ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகள் இணைந்து ரூ.20 லட்சம் இழப்பீடு அளித்தன. ஆனால், கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு வெறும் ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயமாகும்.
இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தான் நீதி வழங்க முடியும். எனவே, 20 பேர் படுகொலையை கடுமையாக கண்டிப்பதுடன், இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு  தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஆந்திர சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 3000 தமிழர்களை விடுதலை செய்யும்படியும் ஆந்திர முதலமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட வேண்டும்.

வங்கதேசத்தில் பஸ் மரத்தில் மோதி 24 பேர் பலி

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து தென் மாவட்டமான பாரிசலுக்குச் சென்ற பஸ் ஒன்றில், 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் பரித்பூர் மாவட்டம் பாங்க் என்ற பகுதியில் சென்ற போது பஸ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 24 பேர் பலியாயினர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எழுத்துலக வேந்தன், ஜெயகாந்தன் மறைவு: கருணாநிதி இரங்கல்!

சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவிதுள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தமிழ் இலக்கிய உலகத்தில் “ஜே.கே.” என்று அன்பொழுக அழைக்கப்பட்ட – எழுத்துலகச் சிற்பி, அருமை நண்பர் ஜெயகாந்தன் மறையது விட்ட செய்தியினை அறிந்து அதிச்சியுற்றேன். “துயரம் தனித்து வருவதில்லை” என்பது எவ்வளவு உண்மை! நேற்றிரவு இசைமுரசு நாகூர் அனீபா மறைந்த செய்தியைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் மறைவுச் செய்தி இன்று அதிகாலையில் கிடைத்தது. தொடக்கத்தில் திராவிட இயக்கத்தின்மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு காலப் போக்கில் மாறியது; அவருடைய அணுகுமுறையும் மாறிற்று. என்மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் “இசபெல்லா” மருத்துவ மனையிலே அனுமதிக்கப் பட்டிருக்கும் செய்தியினை அறிந்து, என் மனைவி ராஜாத்தியும், என் மகள் கனிமொழியும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டுவந்து என்னிடம் கூறியதும், அப்போது முதலமைச்சராக இருந்த நான் உடனடியாக அவரை “அப்பல்லோ” மருத்துவ மனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன். உடல் நலம் அப்போது தேர்ச்சியடைந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிய போது கூட, தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மா. ராஜேந்திரனிடம் “நான் வீட்டிற்குச் செல்லும்முன் கலைஞரைப் பார்த்து நன்றி கூறி விட்டுத் தான் செல்வேன்” என்று பிடிவாதமாகக் கூறி, நேரில் என்னை வந்து சந்தித்து, “என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்” என்ற ஜெயகாந்தனின் சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன. மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்றவர் – பத்ம பூஷண் விருதைப் பெற்றவர் – சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்றவர் – “முரசொலி” அறக்கட்டளை சார்பில் இலக்கியத்திற்கான விருதைப் பெற்றவர். பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கிப் பழகியவர். என்னிடம் மாறாத அன்பு கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து கலந்து கொண்டவர். இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் அருமை நண்பர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துக்கள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.