நஸ்ருதீன் சென்னையில் பிரபல தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார் . இவருடைய சொந்த ஊர் பீஹார். இவர் தன்னுடைய தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சபீனா என்ற பெண்னை காதலித்தார். சபீனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சபீனாவை வற்புறுத்தி விவகாரத்து வாங்க வைத்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இருவருக்கு பணப்பிரச்னை எழவே, குடும்பத்தில் விரிசல் விழத் தொடங்கியது. .
அரபு நாட்டுக்குச் சென்று வேலைபார்க்க சபீனா முடிவு செய்தார். அதன்படி, தன்னுடைய குழந்தைகளை நஸ்ரூதினிடம் கொடுத்துவிட்டு, அரபு நாடு செல்ல முயன்றார். ஆனால், இதற்கு நஸ்ரூதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.கணவர் நஸ்ருதீனின் எதிர்ப்பையும் மீறி அரபு நாடு செல்வதற்காக, தில்லி விமான நிலையம் சென்றார் சபீனா. இதனால் ஆத்திரமடைந்த நஸ்ருதீன், சபீனாவின் வெளிநாட்டு பயணத்தை தடுக்கலாம் என முடிவு செய்தார்.
இதற்காக கூகுளில் அரபு நாடு செல்லும் விமானங்களை கண்டறிந்து, அவற்றின் புறப்படும் நேரத்தை குறித்து வைத்துக் கொண்டார். பின்னர், தில்லி விமான நிலையத்துக்கு போன் செய்த நஸ்ருதீன், ‘என் மனைவி ஒரு தற்கொலைப்படையைச் சேர்ந்த மனித வெடிகுண்டு. இப்போது அவள் அரபு நாடுகள் செல்லும் விமானத்தில் ஏறியிருக்கிறாள். நடுவானில் விமானம் செல்லும் போது அது வெடித்துச் சிதறிவிடும்’ இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள் அனைத்து இடங்களிலும், அரபு செல்லும் எல்லா விமானங்களையும் சோதனை செய்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், அது புரளி என்று விட்டுவிட்டனர்.
இதனிடையே விமான நிலையத்தக்கு போன் செய்து, மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை விசாரணை செய்த தில்லி காவல்துறை, நஸ்ரூதின் தான் மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர், நஸ்ருதீனை கைது செய்த காவல்துறை, தில்லி சிறையில் அவரை அடைத்தனர்.