ஊடகங்களில் ஊடாக விவாதிப்பதற்காக, தமிழக பாஜக,.வினருக்கான தடை உத்தரவு நேற்று நீக்கிக் கொள்ளப் பட்டுள்ளது. தமிழக பாஜக., சார்பில் 27 பேர் ‘டிவி’ ஊடக விவாதங்களில் பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
தமிழக பாஜக., சார்பில் கட்சி நிர்வாகிகள் சிலர் ‘டிவி’ ஊடக விவாதங்களில் பங்கேற்று, கட்சியின் கருத்துகளை, பிரச்னைகளில் கட்சியின் கொள்கைகளைப் பேசி வந்தனர்.
ஆனால், ஊடக விவாதங்களில் பாஜக.,வினருக்கான வாய்ப்புகள் மறுக்கப் படுவதாகவும், பாஜக.,வினர் மீது அவதூறுகளை அள்ளி வீசி, ஊடக விவாதங்களின் மூலமே பாஜக.,வைக் குறித்த தவறான கருத்தோட்டத்தை ஊடகங்கள் உள்நோக்கத்துடன் வெளிப்படுத்துகின்றன என்றும் பாஜக., தொண்டர்கள், பாஜக., அனுதாபிகள் மத்தியில் கோபம் ஏற்பட்டது.
இதை அடுத்து, பாஜக., சார்பில் இனி யாரும் ஊடகங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்று தமிழக தலைவர், தமிழிசை சௌந்தர்ராஜன், ஊடக விவாதங்களில் கட்சியினர் பங்கேற்க தடை விதித்தார்.
இந்நிலையில், பாஜக., அந்த விரதத்தை தற்போது முறித்துக் கொண்டுள்ளது. ஊடக விவாதங்களில் ஊடாக விவாதிக்க 27 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில், பாஜக., சார்பில் ஓரிரு புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில பொதுச் செயலர் நரேந்திரன், இவர்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதும்… பாஜக., ஊடக விவாதங்களில் பங்கேற்போரின் பட்டியலில் பெரிய மாற்றமில்லை! ஊடகங்களின் போக்கிலும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை!