திட்டக்குடி அருகே பாழடைந்த கிணற்றைச் சீரமைத்து இளைஞர்கள், அதை மழைநீர் சேகரிக்க தக்கதாக தயார்படுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியில் பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று முன்வந்து திட்டக்குடி வட்டம், சிறுப்பாக்கம் கிராம இளைஞர்கள் செயலாற்றியுள்ளன்ர்.
இந்தப் பகுதியில் நெசவாளர்களின் பயன்பாட்டுக்காக தோண்டப்பட்ட கிணறு ஒன்று பல்வேறு காரணங்களால் தூர்ந்துபோனது. இதைக் கண்ட இளைஞர்கள், கிணற்றை தூர்வாரி மழைநீரைச் சேகரிக்கப் பயன்படுத்தினால் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதோடு, அந்தப் பகுதியையும் பசுமையாக மாற்றலாம் என்று திட்டமிட்டனர்.
இதையடுத்து, கிராம இளைஞர்கள் ஒன்று திரண்டு தங்களால் இயன்ற அளவில் ரூ.25 ஆயிரம் வரை நிதி திரட்டினர். மேலும், தங்களது உழைப்பையும் அளிக்க முன்வந்தனர். இதனால் சுமார் 9 அடிக்கு ஆழத்துக்கு கிணறு தூர்வாரப்பட்டது. பின்னர், மழைநீர் வழிந்தோடும் வகையில் ஏற்கெனவே இருந்த வழிப் பாதைகளையும் சீரமைத்தனர்.
மழைநீரை அப்படியே கிணற்றுக்குள் விட்டால் கரை பலவீனப்படும் என்பதால், தமிழ்க்காடு அமைப்பினரின் ஆலோசனையின் பேரில் மாற்று ஏற்பாடாக மற்றொரு பள்ளம் தோண்டி அதில் தண்ணீரை தேக்கி அங்கிருந்து கிணற்றில் தண்ணீர் விடும் வகையில் ஏற்பாடு செய்தனர்.
இவர்களது இந்த முயற்சி சில நாள்களிலேயே பலனை அடைந்தது. அண்மையில் அந்தப் பகுதியில் மழை பெய்த நிலையில், இளைஞர்கள் சீரமைத்த வாய்க்கால்களின் வழியாக மழைநீர் வழிந்தோடி கிணற்றை அடைந்தது.
இதுகுறித்து கிராம இளைஞர்கள் கூறியதாவது: ஊரின் மையப் பகுதியிலிருந்த சேதமடைந்த கிணற்றை தூர்வாரினோம். அதில் தற்போது மழைநீர் தேங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் கிணற்றை மேலும் 15 அடிக்கு தூர்வாரவும், அதைச் சுற்றி 4 ஏக்கரில் மரக் கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.