ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பண மோசடி செய்த பேராசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அமிர்தா ஒட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் 2016ம் ஆண்டு கோவையை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக அதே கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர் ரமேஷ்பாபு தலா 2 லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை வசூலித்துள்ளார்.
பின்னர் படிப்பு முடிந்த நிலையில் வேலை வாங்கித் தருமாறு பேராசிரியர் ரமேஷ் பாபுவிடம் உள்பட மாணவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கவே ஐயம் கொண்ட மாணவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் ஓட்டல் ஒன்றில் கொடுத்தது போல் பணி நியமன ஆணையை மாணவர்களுக்கு வழங்கி சமாளித்துள்ளார் பேராசிரியர் ரமேஷ் பாபு.
ஆனால் அதையும் போலி என கண்டு பிடித்தனர் மாணவர்கள். அதனால் பணம் கேட்டு அவரிடம் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பேராசிரியர் ரமேஷ் பாபு குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டடார். இது குறித்து கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்வர் உள்பட பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மற்றும் சென்னை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரில் 30 மாணவர்களிடம் சுமார் 70 லட்சம் வரை பணம் வசூலித்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தனர். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை அவரை அங்கும் இங்கும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இதனையடுத்து பேராசிரியர் குறித்து சமூகவலைளதளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அவரது போட்டோவுடன் பதிவிட்டுள்ளனர்.
முகநூலில் பேராசியிரியர் ரமேஷ் பாபுவின் மோசடியினை கண்ட உத்தரபிரதேசத்தில் இருக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு அவர் எங்கள் மாநிலத்தில் தான் இருக்கிறார் என்று சொல்லி உள்ளனர். மாணவர்கள் ரமேஷ் பாபு குறித்த ஆதாரங்களுடன் மீண்டும் காவல்துறையை நாடியுள்ளனர்.