பச்சையா சொல்றதுக்கு பெயர் தான் பச்சை அறிக்கை!!
இப்படி ஒரு விளக்கத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர், அதுவும் அமைச்சர் ஒருவர் கூறுவதை கேட்கும்போது, தமிழர்களாகிய நமக்குப் புல்லரிக்கவே செய்கிறது.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவுக்குப் பின்னர் அடக்கியாளும் திறமை இல்லாது போய்விட்டதாய்க் கூறப்படுவதுண்டு. கருணாநிதிக்குப் பின்னர் பிறரை காயப் படுத்திப் பேசும் தேர்ந்த குயுக்தி நிறைந்த சொற்களைக் கையாள்பார் எவருமில்லாமல் போய்விட்டனர் என்று சொல்வதும் உண்டு.
தற்போதைய சூழலில் மக்களுக்கான எதிர்காலத்தின் தேய்மான அரசியலை பிறை பார்த்து மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் தத்துப் பித்தென்று தமிழே ததிங்கினதாம் போடுவதாய் உளறிக் கொட்டி, சொல்வாயில்புகா செல்வராய் சென்றுகொண்டிருக்கிறார்.
தமிழக ஆளும் அரசியல்வாதிகள் தரப்பில், அடிக்கடி செய்திகளில் முகம் காட்டும் அமைச்சர் ஜெயக்குமார், ஏதோ தன் பங்குக்கு ஜோக்கர் என்று ஸ்டாலின் வாயால் பெயர் வாங்கி, தன்னைத்தானே அவ்வாறு அழைத்துக் கொண்டு ஜோக்கராகவே ஆகிவிட்டார்.
முதலமைச்சரோ ஏதோ வாய் திறந்தாலும், அது அவ்வளவாக சமூகத்தில் எதிரொலிப்பதில்லை! அவரது சொல்வீச்சும் மக்களிடம் கவனம் பெறுவதாய் அமைவதில்லை. துணை முதலமைச்சரோ, சமாதித் தியானத்தில் முளைத்தெழுந்தார். தொடர்ந்து தியானம் செய்வதில் மட்டுமே வல்லவராகிப் போனார்.
இந்நிலையில் எதிர்த்தரப்புக்கு அடிகொடுக்கும் சிம்ம கர்ஜனை செய்பவாய், நரித்தனத்தை வெளிப்படுத்தும் நயம் கொண்டவாய் திகழ்கிறார் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,
அண்மையில் அவர் சொன்ன வெள்ளையறிக்கைல்லாம் முடியாது… வெள்ளரிக்காய வேணா தாரோம்.. என்ற வாசகங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. அப்படியும் அசராமல் திமுக., தலைவர் சுடாலினுக்கு பதில் கொடுத்து வருகிறார் கேடி ராஜேந்திரபாலாஜி.
இப்போதைய அவர் அறிக்கை வாசகம் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், வெள்ளை அறிக்கை என்னக்க… பச்சை அறிக்கை கூட தாரோம் என்று சொன்னதற்கு, அதென்ன பச்சை அறிக்கை என்று கேட்டதற்கு… பச்சையா சொல்றது பச்சை அறிக்கை என்று போட்டாரோ ஒரு போடு…!