அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கார் விருதுநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சாத்தூரில் இருந்து சிவகாசி வரை கார் ஒன்று சென்றது. அப்போது அந்த கார் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வளைவில் அதிவேகமாக திரும்பிய போது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் மற்றும் 16 வயதுடைய சிறுவன் இருவரும் உயிரிழந்தனர்.
காரை ஓட்டிச் சென்ற கார்த்திக்ராஜா என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். பத்து பேருக்கும் குறைவாகவே ஏற்றி செல்லும் வாகனத்தில் 3 சிறுவர்கள் 12 பெரியவர்கள் என மொத்தம் 15 பேரை ஏற்றிச் சென்றது மற்றும் மிதமான வேகத்தில் செல்லக்கூடிய வளைவில் அதிவேகமாக சென்றது என இந்த இரண்டு காரணங்களால் தான் இத்தகைய விபத்து நேரிட்டுள்ளது என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தினால் 3 பேர் உயிர் இழந்துள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கின்றனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றினால் விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளது என்பது குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.