
காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களில் 5 பேர் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் வீட்டு காவலில் உள்ள 5 தலைவர்கள் விரைவில் விடுதலை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை கடந்த மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது.
அதனைதொடா்ந்து காஷ்மீரை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது.

அடுத்த மாதம் அந்த இரு பகுதிகளும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்பட உள்ளது. .
காஷ்மீரில் அதிகாரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டதை அடுத்து இனி அது மாநில அந்தஸ்துடன் செயல்பட இயலாது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்களும், பிரிவினைவாதிகளும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதை எதிர்த்து மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் கூடுதலாக 1 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு முக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட்டனர்.
மேலும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அது மட்டுமின்றி அந்த மாநில அரசியல் மூத்த தலைவா்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா, கூரியத் தலைவர் மிர்வாஸ் உமர்பாரூக் உள்பட வன்முறையை தூண்டி விடுவார்கள் என்று கருதப்படும் சுமார் 3 ஆயிரம் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

சில வாரங்கள் கழித்து காஷ்மீரில் சுமூக நிலை தொடங்கியதால் தகவல் தொடர்பு மீண்டும் கொண்டு வரப்பட்டு வருகிறது.
கைதானவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டனர்.
வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பேரில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மீதமுள்ள சுமார் 1000 பேர் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட் டுள்ள நிலையில் மற்றவர்கள் பள்ளிகளிலும், விடுதிகளிலும் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் மீது 107-வது சட்டப்பிரிவின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியில் செல்ல விரும்புபவர்கள் நிபந்தனையுடன் வெளியே செல்லலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
அதாவது விடுதலை செய்யப்பட்ட பிறகு அரசியல் நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபட மாட்டோம் என்று பிணை பத்திரம் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு செல்லலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
பெரும்பாலான தலைவர்கள் இந்த நிபந்தனையை ஏற்கவில்லை. என்பது குறிப்பிடதக்கது.
ஆனால் கூரியத் தலைவர் மிர்வாஸ் உமர்பாரூக், 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மக்கள் மாநாட்டு தலைவர் ஒருவர் ஆகிய 5 பேர் நிபந்தனையை ஏற்று விடுதலையாக முன் வந்தனர்.
அவர்களிடம் பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த 5 பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுதலையாக விருப்பம் தெரிவித்துள்ள எம்.எல். ஏ.க்களில் 2 பேர் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்.
இவர்கள் பிணை பத்திரம் எழுதி கொடுத்து இருப்பதால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாது.
அவர்கள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பிணை பத்திரத்தின் அடிப்படையில் மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
உடனடியாக அவர்களை கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யலாம்.
இதற்கு பயந்துதான் பெரும்பாலான தலைவர்கள் பிணை பத்திரம் எழுதி கொடுத்து விட்டு விடுதலையாக முன்வரவில்லை.
காஷ்மீரில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு இன்றுடன் 46 நாட்கள் ஆகிறது.
இந்த 46 நாட்களும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இன்னமும் பெரும் பாலான கடைகள் திறக்கப்படவில்லை. வாகன போக்கு வரத்தும் அதிகரிக்கவில்லை.
என்றாலும் மத்திய அரசு காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பினால் போதும் என்று கருதுகிறது.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு இருப்பதால் மற்ற தலைவர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.
அவர்களால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட கூடாது இன்னமும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தகவல் தொடர்பு மட்டும் சீரடைந்துள்ளது.
இதற்கிடையே காஷ்மீரில் சுமூக நிலையை முழுமையாக கொண்டு வர சில புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மக்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும் புத்துணர்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் மன மகிழ்ச்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மக்கள் மனதில் வன் முறையில் இருந்து சாதாரண நிலைக்கு மாற்ற முயற்சி நடக்கிறது.
இது தவிர காஷ்மீரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களையும் அழைத்து புதிய வகையில் பயிற்சி தொடங்கி உள்ளனர்.
மற்ற மாநிலங்களை போல மேம்பாட்டு திட்டங்களை பஞ்சாயத்து அளவில் எப்படி எப்படி அமல்படுத்துவது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சிகளின் மூலம் காஷ்மீரை மற்ற மாநிலங்களை போல மாற்ற முடியும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



