நான்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இவற்றில், விக்கிரவாண்டி தொகுதி திமுக.,வுக்கும், நாங்குனேரி தொகுதி காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே போட்டியிட்டதன் அடிப்படையில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.
இதில் திமுக கூட்டணியில் விக்கிரவாண்டியில், திமுக.,வின் மாவட்ட பொருளாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் நான்குநேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இதில் யார் போட்டியிடுவார் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் போட்டியிட ஆர்வமாக உள்ளார். அதேநேரம் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்து ராஜினாமா செய்து நாகர்கோவில் எம்பி.,யாகி உள்ள எச்.வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்தை வேட்பாளராக நிறுத்தலாமா என்ற லோசனையும் கட்சியில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இத் தொகுதியில் போட்டியிட விஜய் வசந்த், கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்! முன்னதாக, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர்.