ஸ்மார்ட் டிவியின் கேமிரா அணைக்கப்படாததால், அந்த வீட்டு பெண்ணின் உடை மாற்றும் வீடியோ பதிவாகி வெளியே பரவியது. கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். சமீபத்தில் ‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஆபாச படம் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடியோவில், அவரின் மனைவி, கேரளாவில் உள்ள சொந்த வீட்டில் உடைமாற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதனையறிந்த அவரது குடும்பத்தினரும் இந்த வீடியா எப்படி எடுக்கப்பட்டது என்பது தெரியாமல் குழம்பி தவித்தனர். தொடர்ந்து, வீட்டில் வெளி நபர் யாரோ ரகசிய கேமரா வைத்து, அந்த காட்சிகளை எடுத்திருக்கலாம் என முடிவு செய்து, வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.
வீட்டில் ரகசிய கேமரா எதுவும் கிடைக்கவில்லை. வெளிநபர் வருவதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோவை பரப்பிய நபர்களை தேட துவங்கினர். வீட்டின் படுக்கை அறையில், கேமரா வைத்தது யார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
காட்சி படம் பிடிக்கப்பட்ட கோணத்தை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த கோணத்தில் ஒரு ஸ்மார்ட் டிவி தான் இருந்தது. பிறகு தான் எங்கிருந்து வீடியோ எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
அந்த அறையில் இருந்த ஸ்மார்ட் டிவியில் இருந்த கேமிரா மூலம் சம்பந்தப்பட்ட பெண், உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்தது தெரியவந்தது. அந்த வீட்டில் முன்பு எல்இடி டிவி இருந்தது.
கணவர், சொந்த ஊர் வந்த போது, ஆண்டிராய்டு டிவி வாங்கி கொடுத்துள்ளார். அவர், வெளிநாடு சென்ற பின்னர், அந்த டிவி மூலம், ஸ்கைப் வசதியைப் பயன்படுத்தி வீடியோ கால் பேசி உள்ளார்.
இப்படி ஒரு நாள் பேசிவிட்டு டிவியை அணைத்த அந்த பெண், டிவியில் இருந்த வீடியோவை அணைக்க மறந்துவிட்டார்.. ஆனால், கேமரா தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனை குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இந்த வீடியோ கணவரின் கம்ப்யூட்டருக்கு சென்றுள்ளது,
அப்போது வேறு யாரோ தற்செயலாக கம்ப்யூட்டரை ஹேக் செய்துள்ளனர். அவர்களிடம் அந்த வீடியோ மாட்டிக்கொண்டது. இந்த வீடியோ மீண்டும் அந்த கணவரின் போனுக்கு வந்துள்ளது.
ஸ்மார்ட் சாதனங்களில் கவனம் கேரளாவில், ஒரு மாதத்தில் மட்டும் 200 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படங்களை பரவ செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தங்களது சாதனங்கள் மீது பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவை, பயன்படுத்தாமல் இருக்கும் போது, அதில் மின்சாரத்தை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மொபைல் போனில், இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருந்தாலும், அந்த போனை பயன்படுத்துபவர் எங்கு சென்றார்.எங்கு உண்வு உண்டார் என்பது உள்ளிட்ட அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
பெரும்பாலான மக்கள், சைபர் குற்றங்களில் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியாமல் உள்ளனர். மொபைல் போன்களில், சில செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது, அந்த செயலி, அவர்களின் தகவல்களை பயன்படுத்த அனுமதி கேட்பதை தெரிந்து வைத்திருப்பது இல்லை.
மேலும் சில செயலிகள், பதிவிறக்கம் செய்யும் போது, அவை, பயன்பாட்டாளர்களின் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த அனுமதி கேட்கும். இவை தான், தகவல் கசிய முக்கிய காரணமாக உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.