சென்னை கே.கே.நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குப் பெண் ஒருவர் லைசென்ஸ் பெறுவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண், ஜீன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து சென்றுள்ளார். அப்போது, `இதுபோன்ற உடையுடன் வண்டியை ஓட்டி தேர்வில் ஈடுபடக் கூடாது. சல்வார் கமீஸ் உடை அணிந்துவாருங்கள்’ என அந்தப் பெண்ணிடம் அதிகாரிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் தன் வீட்டுக்குச்சென்று உடைமாற்றி வந்த பின், வண்டியை ஓட்டி மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக, பெண்கள் ஜீன்ஸ் உடையுடன் வந்தால், வாகனத்துக்கு லைசென்ஸ் பெறுவதற்கான சோதனைக்கு அனுமதியில்லை என்று தகவல் பரவத்தொடங்கியது.
சென்னையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. இந்த நிலையில், இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “லைசென்ஸ் பெறுவதற்கான இருசக்கர வாகன சோதனைக்கு எந்தவித ஆடைக்கட்டுப்பாடும் இல்லை. அப்படி எந்தவோர் அறிவிப்பும் இல்லை. ஆனால், ஒரு பரிசோதனைக்கு வருவதற்கு முன்பு ஆண்களும் பெண்களும் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் நல்லது. நீளமான துப்பட்டாவோ அல்லது புடவை அணிந்து வாகனம் ஓட்டும்போது, அது சிக்கலைத்தரும். அவர்களின் நலனுக்காகத்தான் இதைக்கூறுகிறோம்” என்றார்.
மற்றொருவர் கூறுகையில், “இது ஒரு தவறான புரிதல்தான். ஆண்களும் பெண்களும் கண்ணியமான மற்றும் இடையூறில்லாத உடையில் வர வேண்டும் என்பது எங்களுடைய பரிந்துரை மட்டுமே. மற்றபடி இது ஒரு விதி அல்லது உத்தரவு என எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஓட்டுநர் பள்ளிகளில்கூட இந்தமாதிரியான ஆடைகளை அணிந்துவர வேண்டும் என்று அவர்கள் கூறுவதுண்டு.
ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல. இதேபோல 6 மாதங்களுக்கு முன் மற்றொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த பெண்ணிடம், “இருசக்கர வாகனங்களைப் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு ஏற்றவாறு ஆடை அணியும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆண்களும் ஷார்ட்ஸ் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். பெண்களும் அவர்களுக்குப் பாதுகாப்பான வசதியான, கண்ணியமான ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும்” என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.