தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 270 ஏசி பேருந்துகள் உட்பட மொத்தம் 2,000 புதிய பேருந்துகளை வாங்க ரூ.616 கோடியில் டெண்டர் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து துறையில் பழைய பேருந்துகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக புதிய பேருந்துகள் அதிக அளவில் இணைக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு சார்பில் சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் புதியதாக 2,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.616 கோடியில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு படுக்கை மற்றும் இருக்கை ஏசி வசதியுடன் கூடிய 100 பேருந்துகளும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 170 ஏசி பேருந்துகளும் இடம் பெற்றுள்ளன இந்த பேருந்துகள் அனைத்தும் பிஎஸ்4 தரத்தில் இருக்கும்.
போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்ட போது, ”அரசு போக்கு வரத்து கழகங்களில் புதிய பேருந்துகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. புதிய பேருந்துகளின் வருகையால் பயணிகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மீண்டும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அடுத்த கட்டமாக ஏசி, படுக்கை வசதி பேருந்துகள் உட்பட மொத்தம் 2,000 புதிய பேருந்துகளை அரசு போக்கு வரத்து கழகங்களில் இணைக்க உள்ளோம். இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 5 மாதங்களில் இந்த புதிய பேருந்துகள் படிப்படியாக வரும். பழைய பேருந்துகள் நீக்கப்படும்.” என்றனர்.