
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் வீச்சு அதிகம் உள்ளது. இந்த வெப்பத்தையே மக்கள் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இருக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கப் போகிறோமோ என்று மக்கள் பெரும் கவலையுடன் இருக்கின்றனர்
தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கி, கடந்த சில நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்தது.

பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலையானது, கேரளா முதல் குஜராத் வரை பரவியுள்ளது.
இந்த மலைகளில் 33% தேனி மாவட்டத்திலேயே தான் இருக்கிறது. இந்நிலையில், கோடைக்காலத்திற்கு முன்பாகவே கூடலூர், மேகமலை, தேவாரம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மலைகளில் தீப்பற்றி எரிகிறது.

காட்டுத்தீயின் காரணமாக, வனவிலங்குகள் காட்டில் இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்து வருகின்றன.
இது குறித்துப் பேசிய தேனி மாவட்ட வன அலுவலர், தேனியில் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 100 கி.மீ தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப் பட்டுள்ளது என்றும் தாற்காலிகமாக 30 தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

