மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் 180 பயணிகள் வந்தனர். கொரோனா பீதி இருப்பதால் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் முககவசம் வழங்கப்பட்டது.
இதில் மாஸ்க் அணிந்து விமானத்தில் வந்த மலேசியா நாட்டின் சலாலம்புர் சுபம் ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா கோபால்(65) என்பவர் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக விமான பணிப்பெண்ணிடம் கூறினார். தொடர்ந்து அவருடைய முக கவசத்தை கழற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் விமானம் திருச்சியில் தரையிறங்குவதற்கு முன் சென்னையாகோபால் மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து விமானம் தரையிறங்கிய பின்னர், சென்னையாகோபால் உடல் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது தெரியவரும். மேலும் அந்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.