கொரோனா வைரஸ் பரவலால் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான போக்குவரத்து துறை பெரிய இழப்பை சந்தித்துள்ளது. நம் நாட்டில் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வருவாய் இழப்பு மற்றும் நஷ்டத்தை ஈடுகட்ட, பணியாளர்கள் எண்ணிக்கை குறைத்தல், சம்பள குறைப்பு மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகளுக்கு விதிக்கப்படும் விமான பயணர் கட்டணத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. அதாவது உள்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்படும் விமான பயணர் கட்டணம் ரூ.160ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது அது ரூ.150ஆக உள்ளது. அதேபோல் வெளிநாட்டு பயணிகளிடம் வசூலிக்கப்படும் விமான பயணர் கட்டணம் 4.85 டாலரிலிருந்து 5.2 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விமான பயணர் கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
விமான பயணர் கட்டணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டிக்கெட்டோடு வசூலிக்கப்படுகிறது. விமான பயணர் கட்டணத்தை விமான நிறுவனங்கள் பயணிகளிடமிருந்து வசூலித்து மத்திய அரசிடம் வழங்குகின்றன. விமான பயணர் கட்டணம் வாயிலாக கிடைக்கும் பணத்தை இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவிடுகிறது.