தமிழன் தொலைக்காட்சியின் நிருபர் மோசஸை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்று, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் டிவி.,யில் நிருபராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதை செய்தியாக வெளியிட்டார். இதனால் இவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. மோசஸ் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லையாம்!
இந்நிலையில் நேற்றிரவு மோசஸ் தனது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்து போது அவரை ரவுடிகள் சரமாரியாக வெட்டியுள்ளனர். மோசஸின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரின் தந்தை, ரத்த வெள்ளத்தில் சரிந்த மகனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், நிருபர் மோசஸின் படுகொலை தொடர்பாக விக்னேஷ், மனோஜ், ஆதி ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி நவமணியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பத்திரிகையாளர்கள், ஊடக சங்கத்தினர் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர்கள், மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழன் தொலைக்காட்சி நிருபர் மோசஸ் படுகொலை; சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்: நீதி கேட்டு தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்தார். இதனால் நிருபருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று (08-11-2020) இரவு வீட்டில் இருந்த மோசஸை வீட்டுக்கு வெளியே வரவழைத்த ரவுடி கும்பல் ஒன்று, அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது.
இந்தக் கொடூரப் படுகொலையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
செய்தி வெளியிட்டதற்காகப் படுகொலை என்றால், தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு நிலையின் அவலத்தை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமுக விரோதக் கும்பல்கள், மணல் , நீர்நிலை ஆக்கிரமிப்பு, கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பவர்கள் , சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகள் ஓங்கியுள்ளன.
இதன் விளைவாகவே இன்று ஊடகவியலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் படுகொலை தொடர்பாக விக்னேஷ், மனோஜ், ஆதி, ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி நவமணியை போலீஸார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற சமுக விரோதக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அரசியல் கையூட்டுக்குக் கட்டுப்பட்டுள்ளதா? இதில் எதுவாக இருந்தாலும் உள்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுக் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மோசஸ் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
சமுக விரோதக் கும்பலின் கொலைவெறிக்குப் பலியான நிருபர் மோசஸ் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
- பாரதிதமிழன், இணைச் செயலாளர், சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் என்ன செய்கிறார்..?” என்று,
செய்தியாளர் படுகொலைக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:
மக்கள் நலன் சார்ந்து உண்மையை உலகறிய செய்த ஊடகவியலாளருக்கு சமூக விரோதிகள் கொலை மிரட்டல் விடுத்ததை செய்தியாளர் புகாராக தெரிவித்தும் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டதால் செய்தியாளர் திரு. மோசஸ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பதைப் போல குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தவறியதால் தற்போது செய்தியாளரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. இச்செயலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காவல்துறையின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கிறாரா..? இல்லை தனது ஆட்சியின் எஞ்சிய காலத்தை எப்படி கடக்கலாம் என்பதில் கவனம் செலுத்துகிறாரா..? எனத் தெரியவில்லை. ஏனெனில் தற்போது தமிழகம் முழுவதும் அரங்கேறி வரும் படுகொலைகளும், கொள்ளைகளும் ஊடகங்கள் முன் சாட்சியாகி வரிசை கட்டி கொண்டு வருவதை காணும் போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அதிலும் நாட்டில் நடக்கும் அநியாயங்களை, அக்கிரமங்களை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகவியலாளர்களும், மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் காவல்துறையினரும் கூட தொடர்ந்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் பல்வேறு மாவட்டங்களில் அரங்கேறி வருவதை கண்கூடாக காண்கையில் சாமானிய மக்களின் பாதுகாப்பு தமிழகத்தில் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளதை நம்மால் உணர முடிகிறது.
எனவே தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. மோசஸ் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மக்கள் நலன் சார்ந்து செயல்பட்ட செய்தியாளர் குடும்பத்திற்கு 25லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட ஆவண செய்திட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு, காவல்துறையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்