சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இவர் அடுத்த ஆண்டு (2021 ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும், அபராதத் தொகை ரூ.10 கோடி செலுத்தப் படவில்லை என்றால், 2022ஆம் ஆண்டு பிப்.27ஆம் தேதி விடுவிக்கப்படுவார் எனவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறைக் காலம் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அபராதத் தொகை ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் நீதிபதி சிவப்பா முன் செலுத்தினார். சசிகலாவின் வழக்குரைஞர் அசோகன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் அவரது ஜுனியர் முத்துக்குமார் அபராதத் தொகையை கட்டி ரசீதைப் பெற்றார் என்றும், அதன்படி ஜனவரியில், சசிகலா விடுதலையாவது உறுதி என்றும் தகவல் வெளியானது.