
மதுரையில் குஷ்பு பாஜக.,வை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து பேசினார்.
தமிழக பாஜக சார்பில் “விவசாயிகளின் நண்பன் மோடி” என்கிற பிரச்சார பயணம் தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. மதுரை ஊமச்சிகுளத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பூ கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ கூறுகையில் “வட மாநிலங்களில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது, தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தூண்டி விடப்படுகிறது, ஒன்றரை லட்சம் விவசாயிகள் ஒத்துக் கொண்டதால் வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டது,
எதிர்க்கட்சிகள் விவசாயிகள் வாழ்வில் விளையாட வேண்டாம், வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது.

பாஜக விவசாயிகளை கடவுள் போல பார்த்து வருகின்றது. தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேசவில்லை. விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது!
வேளாண் சட்டத்தை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விசயத்திற்கு வேளாண் சட்டத்தில் தீர்வு கூறப்பட்டுள்ளது, வேளாண் சட்டத்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் 5 இலட்சம் லாபம் கிடைக்கும், 10 ஆண்டுகளில் திமுக – காங்கிரஸ் மக்களின் பிரச்சினைகளை பேசவில்லை!
மக்கள் பிரச்சினைகளை தீர்த்து இருந்தால் திமுக – காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருக்கும். டெல்லியில் நடைபெறும் போராட்டம் விவசாயிகள் போராட்டம் அல்ல, எதிர்கட்சிகள் தூண்டி விட்ட போராட்டம் தான் நடைபெறுகின்றது!
முத்தலாக் சட்டத்தால் நிறைய பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாமே!
பாஜக படிப்படியாக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது, சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது எனக்குத் தெரியாது! எம்.எல்.ஏ சீட்டுக்காக நான் கட்சியில் இருக்க மாட்டேன்!
முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும்.. பிறகு பார்க்கலாம்! அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை மக்கள் எதிர்க்கவில்லை! யார் முதல்வர் வேட்பாளர் என்பதை 2 தலைமைகளும் பேசி மட்டுமே முடிவு செய்யும்! ஜே.பி.நட்டாவும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து பேசி முடிவு எடுத்து அறிவிப்பார்கள்” என கூறினார்.