
கரூரில் திமுக வேட்பாளரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜியின் பேச்சினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் மணல் கொள்ளையை தடுத்தால் அதிகாரிகள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று பேசியதால் அதிகாரிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
திமுக என்றாலே பிரியாணி கடை முதல், பரோட்டோ கடை வரை வன்முறையும், ப்யூட்டி பார்லர் முதல் பெட்டி கடை வரை வன்முறைதான்!
அதுவும் எதிர்கட்சியாக இருக்கும் போதே இத்தனை வன்முறைகளை அரங்கேற்றி வரும் நிலையில் தற்போது, வரக்கூடிய தேர்தலில் திமுக., வென்று முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து விடுவார் என்று ஆங்காங்கே திமுக.,வினர் மக்களிடம் சொல்லி வருகின்றனர். இந்நிலையில், திமுக.,வின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் முதல் திமுக உள்ளாட்சி பிரமுகர்கள் வரை, திமுக பிரமுகர்களும் கூட ஆங்காங்கே போலீஸாரையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டி வருகின்றனர்.
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியும் கூட போலீஸ் அதிகாரியை வெளிப்படையாக மிரட்டியதைக் கண்டு அரசு அதிகாரிகள், போலீஸார் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்த மிரட்டல்களின் வரிசையில், கரூர் மாவட்ட திமுக.,வும் தன் கட்சியின் கொள்கைப்படி, பாரபட்சம் இல்லாமல் பேசி வருவதும் செயலில் இறங்கி இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக., பின்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று பயணித்த செந்தில் பாலாஜியும் அவரோடு திமுக வில் இணைந்த பிரமுகர்களும் தற்போது நாங்கள் ரவுடி கட்சியில் இணைந்து விட்டோம் என்றும், ஆகவே எங்களை பகைத்து கொள்ளாதீர்கள் என்றும் ஆங்காங்கே அதிகாரிகளையும், பைனான்ஸ் பிரமுகர்களையும் மிரட்டி வருகின்றனர்.
இந் நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அதுவும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் (அப்போதைய ஆட்சியர்) இடம் மனு கொடுத்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வாகிய எனக்கு அழைப்பு வரவில்லை என்றால், இனி மாவட்ட ஆட்சியர் வெளியே நடமாட முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்த மிரட்டல் சம்பவத்தின் சுவடு இன்னும் மறையாமல் உள்ள நிலையில் கடந்த திங்கள் கிழமை வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், கரூர் திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி பிரச்சாரத்தில் பேசிய பேச்சு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மே மாதம் மு.க.ஸ்டாலின் 11 மணி அளவில் முதல்வராக பொறுப்பேற்பார். அடுத்து 11.05 மணிக்கெல்லாம், வண்டியில் மணல் அள்ள, ஆற்றுக்கு எல்லோரும் செல்லலாம், அதை எந்த எந்த அதிகாரிகளும் தடுக்க மாட்டார்கள்… தடுத்தால் அந்த அதிகாரிகள் இருக்க மாட்டார்கள்… என்று பேசிய பேச்சும், அதை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய பேச்சும் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, தமிழக அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது திமுக.,வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.