இ-பதிவு இணையதளத்திலிருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கம்!
பொது ஊரடங்கு காலத்தில், இ-பதிவு செய்து விட்டு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், அல்லது மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்காக, முந்தைய ஆட்சியில் நடைமுறையில் இருந்த இபாஸ் முறையை ரத்து செய்துவிட்டு, இ-ரெஜிஸ்ட்ரேஷன் எனும் வகையில், இ-பதிவு செய்தால் போதும் என்றும், அதற்கான சான்றுகளை வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதில், சில காரணங்களைச் சொல்லி, அதற்கான தகுந்த கோப்புகளை பதிவேற்றம் செய்து, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். https://eregister.tnega.org என்ற இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
தமிழக அரசு இரு தினங்களுக்கு முன் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பில், “மாவட்டங்களுக்கு இடையில் மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி பரப்பப்படுகிறது. மாறாக மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணைய தளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப் படுகிறது”என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வாறு மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கான காரணங்களில், இணையதளத்திலிருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கப் பட்டிருக்கிறது. இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்கள் என மூன்று காரணங்கள் மட்டுமே, இ-பதிவு செய்யும் இணையதளத்தில் கொடுக்கப் பட்டிருப்பதால், இந்த மூன்று ஆப்ஷன் இல்லாமல் பதிவு செய்ய முடியாது என்பதால், அடுத்த அடுத்த நாட்களில் திருமண நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வைகாசி, ஆனி மாதங்களில் தான் அதிக அளவில் சுப முஹூர்த்தங்கள் நடைபெறும். இதற்காக பலர் திருமணங்களை இந்த மாதங்களில் திட்டமிட்டு ஏற்பாடு செய்து வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற நிலையில், குறைந்த அளவில் முக்கிய உறவினர்களை மட்டும் அழைத்து திருமணங்கள் நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள், வெலைவாய்ப்பு, நேர்முகத் தேர்வு போன்றவற்றுக்கு இனி வெளி மாவட்டங்களுக்குச் செல்ல முடியாதா? அல்லது, திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்று இந்த அரசு சொல்கிறதா என்றெல்லாம் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.