லூர்துசாமி விவகாரம்: ஸ்டாலின் செய்த தவறு!

Published:

stanesamy2 - 2026

தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிட்ட
தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

ஸ்டேன் சாமி என்று அழைக்கப்படும் ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி (84), அரியலூர் மாவட்டம் விரகனூரைச் சேர்ந்தவர். கத்தோலிக்க கிறிஸ்தவ மதபோதகரான இவர், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் 1975 முதல் 1986 வரை கிறிஸ்தவ மையத்தில் பணியாற்றிய பின் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை தனது வசிப்பிடமாக்கி கொண்டார்.

பல மாநிலங்களிலும் பழங்குடியினரை கூட்டம் கூட்டமாக மதம் மாற்றினார். வெளிநாடுகளில் இருந்து திரட்டிய பெருந்தொகைகளை மதமாற்றத்துக்கு பயன்படுத்தியதோடு, நக்சலைட் கும்பல்களுக்கும் வழங்கி வந்தார். முன்னர் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் இவருக்கு சாதகமாக செயல்பட்டதால், இவர் மீது காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை.

2018இல் மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் பகுதியில், நக்சலைட்களும் பிற தேசவிரோதக் கும்பல்களும் கைகோர்த்து பயங்கர வன்முறைகளில் ஈடுபட்டனர். அதில் நடந்த புலன்விசாரணைகளில், இந்த கும்பல்கள் இந்தியாவில் உள்நாட்டுப்போரைத் தூண்டவும், பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதற்கும், இந்த ஸ்டேன் சாமிதான் மூளையாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான திட்டவட்ட ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து, 2020 அக்டோபர் 8இல். என்.ஐ.ஏ. படையால் ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ.) கீழ் இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பை டலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு ஸ்டேன் சாமி, முதுமை பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற, ஐகோர்ட் கடந்த மே 28ல் ஜாமீன் வழங்கியது. அவரது விருப்பப்படி, மும்பையில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, மே 30ல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஜூலை 5ஆம் தேதி காலமானார்.

stanesamy1 - 2026

தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயன்ற குற்றவாளியான ஸ்டேன் சாமியின் அஸ்தி லயோலா கல்லூரியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிறிஸ்தவ மதவெறியின் வெளிப்பாட்டை நாம் புரிந்துகொள்ளலாம். அந்த ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது தவறான முன் உதாரணம். ஓட்டு வங்கி அரசியல் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளின் அரசியல் செல்வாக்கை இது காட்டுவதாக உள்ளது. தமிழகத்தில் நாட்டிற்காக உயிர் நீத்த இராணுவ, காவல்துறை அதிகாரிகளுக்கோ, எதிர்பாராதவிதத்தில் இறந்த குடிமக்களுக்கோ நேரடியாக சென்று முதல்வர் இறுதி மரியாதை செய்வதில்லை என்பதை பார்க்கிறோம். இந்நிலையில் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு முக்கியத்துவம் அளித்த முதல்வரின் செயல்பாடு வேதனையானது.. தமிழக முதல்வருக்கு யாரோ தவறாக வழிகாட்டுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

மேலும், ஐ.நா. சபையின் நல்லிணக்க அதிகாரி மேரி லாலர், இந்திய மனித உரிமை வரலாற்றில் ஒரு கறையாக ஸ்டேன் சாமி மரணத்தை குறிப்பிட்டுள்ளார். இவரது செயல், ஐ.நா.வின் நடுநிலைக்குத்தான் களங்கத்தை ஏற்படுத்துகிறது. நக்சல் இயக்கத்தினரை தூண்டிவிட்டு அப்பாவி மக்களையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் கொலை செய்வது மனித உரிமை என்றால், இதைவிட கேவலமான செயல் வேறு என்ன? என்ற கேள்வி எழுகிறது. மேரி லாலரின் கருத்தில், கிறிஸ்தவ மதவெறி தான் வெளிப்படுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் மேரி லாலாராவின் பேச்சின் உள்நோக்கத்தை வெளிப்படுத்த, ஸ்டேன் சாமி பற்றிய முழு ஆதாரத்தையும் என்.ஐ.ஏ. வெளியிட வேண்டும். ஒரு தேச துரோகியின் செயல்பாடு உலகம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், இதனை காரணமாக கொண்டு, பொய்யான செய்திகளைப் பரப்பி மதப் பிரச்சனையை ஏற்படுத்த கிறிஸ்துவ மிஷனரிகள் சதி செய்யலாம் என எச்சரிக்கின்றோம்.

தமிழக முதல்வரின் செயல்பாடும், ஐ.நா. சபை நல்லிணக்க அதிகாரியின் கருத்தும் உண்மையை மறைக்க முயல்வதாக இந்து முன்னணி கருதுகிறது.

  • மணலி த. மனோகரன்
    (மாநிலச் செயலாளர், இந்து முன்னணி)
ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img