
ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாயைத்திறந்தால் போதும், நமக்கு ஓட்டு அதிகரித்துக்கொண்டே வரும் என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடுபடுவோம்.
அடுத்து கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. அங்கு எனக்கு தேர்தல் குழு பணி கட்சி சார்பில் போடப்பட்டுள்ளது.
இலங்கை பயணத்தை முடித்த பிறகு களத்தில் இறங்குவேன். நிச்சயமாக பிப்ரவரி 27-ந்தேதி வாக்குப்பதிவின் போது பார்ப்பீர்கள். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி வேட்பாளராக வருவார். அதில் எங்களுக்கு கடுகளவு கூட சந்தேகம் இல்லை. கூட்டணி தர்மத்தின்படி, கட்சி வேட்பாளரை களம் இறக்கியுள்ளோம். அவரை வெற்றி பெறச்செய்ய வைப்பது தார்மீகக்கடமை. அதனை பா.ஜ.க. நிச்சயம் செய்யும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில்தான் தி.மு.க.வினர் அனைவரும் உட்கார்ந்து இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆளுங்கட்சி பயந்து, ஒரு இடைத்தேர்தலை தமிழக வரலாற்றில் இதுபோல் சந்தித்தது கிடையாது. இதன் மூலம் தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் பயம் வந்துவிட்டது என்றே தெரிகிறது.




