ஆட்கள் அதிகம் இல்லாவிட்டாலும், மத்தியில் ஆளும் கட்சி என்பதால் பாஜக.,வுக்கு உள்ளும் போட்டிகள், கோஷ்டிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எதிராக ஒரு தரப்பு, கட்சிக்குள்ளேயே வளர்ந்துள்ளது. வெளிப்படையான விமர்சனம் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் நேரடியான சொந்த பெயர் கொண்டோ, அல்லது மறைமுகமான போலி பெயர்களிலோ சிலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஆர்.எஸ்.எஸ்., ஏபிவிபி., ஆகிய இயக்கங்களில் செயலாற்றிய அனுபவம் கொண்டவருமான கல்யாணராமன், தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிலை உடைப்பு அரசியல் இப்போது பரபரப்பாக்கியுள்ளது. பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்த கருத்து ஊடகங்களால் சர்ச்சையாக்கப் பட்ட நிலையில், அவர் தனது கருத்தை வாபஸ் பெற்று நீக்கி விட்ட நிலையிலும், தொடர்ந்து ஹெச்.ராஜாவை குறிவைத்து ஊடகங்கத்தினரும் அரசியல் கட்சிகளும் கை கோத்து இயங்கி வருகின்றனர். போதாக் குறைக்கு, ஹெச்.ராஜாவின் கருத்துக்கு, எதிர்க்கருத்து கொடுக்காவிட்டாலும், விலகியிருப்பதுபோல் கருத்து தெரிவித்தார் கட்சி மாநிலத் தலைவர் தமிழிசை. மேலும், ஈவேரா., சிலை உடைப்பில் ஈடுபட்ட கட்சி உறுப்பினரை நீக்கி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழிசையின் அறிவிப்பை பதிவிட்டு, பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.. .எனும் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, கல்யாணராமன் தன் பேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டார். ஆனால், அந்தப் பதிவினை எடுத்துக் கொண்டு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை ‘பேய்’ என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் ஆதரவாளர் கல்யாணராமன் விமர்சனம் செய்துள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் பரவின.
கல்யாணராமன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது இது தான்…
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்…
முத்துராமனை நீக்கியது கடைந்தெடுத்த முட்டாளத்தனம்னு நான் சொல்ல விரும்பினாலும், அப்படி சொன்னால் நானும் நீக்கப்படுவேன் என்பதால் அதை சொல்லாமல் தவிர்க்கிறேன்…
பாஜகவில் பாஜகவினர் இருக்க வேண்டும், கட்சி வளர வேண்டும் என்றால், பாஜகவில் உள்ள காங்கிரசார் தான் முதலில் நீக்கப்பட வேண்டும்னும் சொல்ல தோணுது… ஆனா அதை சொன்னாலும் பிரச்சனை என்பதால் அதையும் நான் சொல்லல…
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் அப்படின்னு பாரதி சொன்னதை சொல்லி காட்டனும்னு தோணுது… இந்த பாழாய் போன பயம் வந்து சொல்லாமல் தடுக்குது… கட்சி, பதவி என்பது பாருங்க எவ்ளோ பெரிய பயமுறுத்தும் ஆயுதமா இருக்கு…
எங்க அக்கா மாதிரி சிறந்த தலைவி உலகில் இல்லை என்ற இறுதியான, உறுதியான சொல்லை சொன்னால் தான் நான் தப்பிக்க முடியும் என்ற காரணத்தால், தென்னகத்து ஜான்சிராணியின் இந்த செயல் வரவேற்கத்தக்கது என கூறி, எங்க அக்காவுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கங்களையும், அவங்க நயினாவை நோக்கி, காங்கிரசும், காங்கிரசின் வழித்தோன்றல்களும் வாழ்கன்னும் கூவிக்கொண்டு விடைபெறுகிறேன்… நன்றி வணக்கம்…
(எங்க அக்கா பெரியார், பிரபாகரனின் பக்தை என்பது நிறைய பேருக்கு தெரியாது. அது பற்றி தனியே எனது அனுபவத்தை எழுதுகிறேன்)