தைத்திருநாளான தமிழர் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அரசு நூலக வாசக வட்டம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் சமத்துவப் பொங்கல் விழா செங்கோட்டையில் நடந்தது.
இந்த விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தார். இதற்காக நூலக வளாகத்தில் பெண்கள் பானை வைத்து அதில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டனர். அதனைதொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு வாசகர் வட்டத்தலைவர் இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் இராஜமாணிக்கம், தனி வட்டாட்சியர் மரகதநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் இராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். விழுதுகள் டிரஸ்ட் அமைப்புத் தலைவர் சேகர் தொகுப்புரையாற்றினார்.
பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கலைநிகழச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ். எம்.ரஹீம், ஜெ.பி.கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, ரோட்டரி சங்க தலைவர் திருமலைக்குமார், கட்டளைகுடியிருப்பு அரசு பள்ளி தலைமைஆசிரியர் சுடலை, வாசகர் வட்ட செயலாளர் செண்பகக்குற்றாலம், அனைத்து சமுதாய தலைவர் லெட்சுமணன் வாசகர் வட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை நூலக பணியாளர்கள் விஜி, முத்துமாரி, மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மனநல மருத்துவர் நவாஸ்கான் நன்றி கூறினார்.