இது நீட் போட்டி தேர்வு குறித்த பேட்டி…!
ஹலோ எங்கிருந்து பேசறீங்க ?
கீரிப்பட்டிங்க..
கீரிப்பட்டியா? கொஞ்சம் டி வி சவுண்டு குறைச்சுக்கோங்க!!
சொல்லுங்க.. உங்க ஊர்ல எவ்வளவு பேரு நீட் தேர்வு எழுதினாங்க?.
அஞ்சு பேரு எழுதினோம். நாங்க அரசினர் பெண்கள் பள்ளி. பக்கத்தில திண்டுக்கல்லில் செண்டர் போட்டிருந்தாங்க. எல்லா ஏற்பாடும் ரொம்ப நல்லா செஞ்சிருந்தாங்கய்யா. பாதுகாப்பா இருந்திச்சு.. தேர்வு கூட எளிமையா இருந்துச்சுங்கய்யா..
கட்….
ஹலோ, யோவ் செல்வராஜூ, என்னய்யா பேட்டி எடுக்கற? எல்லாம் சிறப்பா இருந்துச்சாம்..! பாதுகாப்பா உணர்ந்தாங்களாம்!! மாசா மாசம் சம்பளம் வாங்கற இல்ல.. என்ன ……த்துக்கு வேலை பாக்கற? என் வேலைக்கு சேர்த்து உலை வச்சுருவ போல இருக்கே!
சாரி ஸார், லைவ் ப்ரொக்ராம்ன்னு முயற்சி பண்ணினேன் ஸார்!
ஒழுங்கா கொஞ்சம் தர்ம நியாயத்தோட வேலை பாருங்கய்யா. ஆப்பு அடிச்சுருவாங்க, ஞாபகம் வச்சுக்க..
சரிங்க ஸார்..
ஹலோ.!
வாடிபட்டியிலிருந்து அருணா பேசறேங்க.. என் கூட கனகா, கயல்விழி, மணிமேகலை, லெச்சுமி இருக்காங்க, எங்க பள்ளி ஆசிரியர் சிவநாதன் சாரும் இருக்காங்க..
நீட் தேர்வு எழுத முடிஞ்சுதா?
ஆமாம் ஸார். மதுரைக்கு போய் எழுதினோம்ங்க.
என்னம்மா இது நாலு பேர் இருக்கீங்க, வாடிபட்டியில செண்டர் இல்லையா?
நாங்களாத்தாங்க விரும்பி மதுரை செண்டர் கேட்டு வாங்கிக்கிட்டோம்.
இங்கிருந்து பஸ்ஸுக்கே ஏகப்பட்டது செலவு ஆயிருக்குமே?
இல்லீங்க, அரசாங்கம் கொடுத்த இலவச பஸ் பாஸ் இருக்குதுங்க..
பயிற்சி எடுக்கறதுக்கே ஆயிரக்கணக்கில் செலவு ஆயிருக்குமே?
இல்லீங்கய்யா, எங்க பள்ளியிலே நல்ல முறையிலே கோச்சிங் கொடுத்தாங்க, சிவநாதன் ஸார் தான் எங்களை பாதுகாப்பா கூட்டிகிட்டு போயி வந்தாரு.
வெயில்ல செண்டர்ல ஒதுங்க கூட இடம் இருந்திருக்காதே? எப்படிம்மா சமாளிச்சீங்க?
நிழல்ல நல்ல காத்தோட்டமான அறையில தான் உட்கார வச்சாங்க. குடி தண்ணீர் வசதியில்லாம் கூட நல்லா இருந்துச்சுங்க.
காதில தோடு, கம்மல் போன்ற நகைகளையெல்லாம் கழட்டி கொடுன்னு மிரட்டி வாங்கியிருப்பாங்களே?
எங்ககிட்ட பெரிசா அப்படி ஏதுமில்லை ஸார்.மேகலை மட்டும் தான் ஒரு செயின் போட்டிருந்தா. அதையும் ஸ்கேன் பண்ணி உள்ள அனுமதிச்சிட்டாங்க. செல்போனுக்கு அனுமதியில்லைன்னு முன்னமே சொல்லியிருந்தாங்க, அதனாலே எடுத்துக்கிட்டு போகலை.
தேர்வு இந்த முறை ரொம்ப கஷ்டமா இருந்திச்சா?
ஓரளவு எளிதாகத்தான் இருந்திச்சுங்க. ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் எல்லா மொழியிலும் கேள்விகள் இருந்திச்சு. நாங்க தமிழ் மொழியில் தேர்வு செய்து எல்லாமே சிறப்பாக எழுதிட்டு வந்துட்டோம்.
கட் ….
தமிழகத்தில் இந்த முறை நீட் தேர்வுக்கு சென்ற மாணவிகள் ஆற்றொண்ணா சோதனைகளுக்கு உட்படுத்த பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலிருந்து மாணவிகளுக்கு துணையாக ஒரு ஆண் ஆசிரியர் அனுப்பப்பட்டிருக்கிறார். கடைசி நேரத்தில் தேர்வுக்கு தயாராகும் மாணவிகளின் மனதில் இது ஒரு சபலத்தை ஏற்படுத்தி இது அவர்களின் தேர்வின் முடிவினை பாதிக்காதா, ஒரு பெண் ஆசிரியை அனுப்பினால் என்ன என்ன சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். சங்கிலி அணிந்து வந்த மாணவிகள் தனிப்பட்ட முறையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். கேள்வித்தாள்களில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் இருந்தாலும் முதலில் ஹிந்தி மொழியே கண்ணில் பட்டதால் அதை கண்டு சில நிமிடங்கள் நிலை குலைந்து போனதாக ஒரு மாணவி கருத்து தெரிவித்திருக்கின்றார். இது போன்ற அறிமுகமே இல்லாத மாற்று மொழிகள் தேர்வுத்தாளில் முதலில் கண்ணில் பட்டால் அது மாணவ, மாணவிகளுக்கு பெரும் மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தரக்கூடும் என்ன உளவியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
நீட் விஷயத்தில் மக்கள் வெறுப்பினை சம்பாதித்திருக்கும் மத்திய அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் கற்பித்திருப்பார்களா என்பது மே 23 ம் தேதி தெரிந்து விடும்
—– செய்திகளுக்காக கோபி செல்வராஜ்
ஹலோ, யோவ் செல்வராஜூ,, இன்னும் நியூஸ்ல காரம் வேணும்யா. ரொம்ப மைல்டா இருக்கு..
ஸார், ஹிந்து பத்திரிக்கைல கூட நீட் பிரச்னையே இல்லாமல் நல்லா நடந்திச்சுன்னு போட்டுருக்காங்க ஸார். அவங்களே சொல்லும்போது நம்மாலே இதுக்கு மேலே காரம் ஏத்துறது கஷ்டம் சார்.!!
கற்பனை: சுவாமிநாதன் சுப்பிரமணியன்