
ஆகஸ்ட் 2 ம் தேதி நம் தேசீய கொடியை வடிவமைத்த திரு பிங்களி வெங்கையா அவர்களின் பிறந்த நாள்.
தேசியக் கொடியை வடிவமைத்தவர், சுதந்திரப் போடாட்ட வீரர், விவசாய சாஸ்திர நிபுணர், பன்மொழிப் புலவர் – ஆந்திராவின் தலை மாணிக்கம் ஸ்ரீபிங்களி வெங்கையா அவர்கள்.
1876, ஆகஸ்ட், 2 அன்று ஆந்திரப் பிரதேசத்தில், மசிலிப்பட்டினதிற்கருகில் ‘பட்லபெனுமரு’ என்ற கிராமத்தில் பிறந்தார் பிங்களி வெங்கையா.
மசிலிபட்டினத்தில் உயர்நிலை படிப்பை முடித்த பின் கொழும்புவில் மேல் படிப்பு முடித்து இந்தியாவிற்கு திரும்பினார். பின் இந்திய ரயில்வேயில் கார்டாக பணியாற்றினார். அதன் பின் பெல்லாரியில் அரசாங்க வேலையில் சேர்ந்தார்.
பின்னர் லாகூருக்குக் குடி பெயர்ந்து அங்கிருந்த ‘ஆங்கிலோ-வேதிக்’ (Anglo-Vedic)) கல்லூரியில் சேர்ந்து உருதுவும், ஜப்பானிய மொழியும் கற்றார். பல துறைகளிலும் வல்லவரான வெங்கையா, ஜியாலஜியில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். வைரச் சுரங்கம் பற்றிய அறிவில் நிபுணராக திகழ்ந்ததால் ஆந்திராவின் ‘டைமண்டு வெங்கையா’ என்றழைக்கப்பட்டார்.
விவசாயத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிபுணராக விளங்கிய இவர் கர்னூல் மாவட்டத்தில் இஞ்சி சாகுபடியில் அதிக மகசூல் பெற ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டார். தென்
ஆப்பிரிக்காவில் ‘Anglo – Boer’ யுத்தத்தில் பிரிட்டிஷ் இந்திய படையில் சேர்ந்து சண்டையிட்டார். அப்போதுதான் அவருக்கு மகாத்மா காந்திஜியின் பரிச்சயம் ஏற்பட்டு, அவரது கொள்கைகளால் கவரப்பட்டார்.
நம் பாரத நாட்டிற்கு பிரத்யேகமாக ஒரு தேசிய கொடி வேண்டும் என்றும் தானே அதனை வடிவமைக்க வேண்டும் என்றும் எண்ணினார் வெங்கையா.
காகிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நமக்கென்று ஒரு தேசிய கொடி வேண்டுமென்று தலைவர்களிடம் வலியுறுத்தினார். இவ்விஷயம் குறித்து தாதாபாய் நௌரோஜி, பால கங்காதர திலகர், லாலா லஜபதிராய், மோதிலால் நேரு, பிபின் சந்திர பால், ஜே, சி, போஸ், ரவீந்திரநாத் தாகூர் போன்ற மேதாவிகளுடன் கலந்தாலோசித்தார்.
1916 இல் ‘பாரத நாட்டிற்கு ஒரு தேசிய கொடி’ என்ற புத்தகத்தை எழுதினார். ஐந்து வருடங்கள் பல்வேறு நாடுகளின் கொடிகளையும் பற்றி ஆராய்ந்து முப்பது வித கொடிகளைப் பற்றி அதில் விவரித்திருந்தார். அவற்றுள் ஒன்றே இன்றைய நம் தேசியக் கொடியானது.
தேசிய கொடியின் அவசியத்தை பற்றி விஸ்தாரமாக பிரச்சாரம் நடத்தினார்.
1921 மார்ச் 31 ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெற்ற அகில பாரத காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தேசிய கொடியின் வடிவம் ஒன்றை தயாரித்துக் கொடுக்கும்படி மகாத்மா காந்தி, வெங்கையாவைக் கோரினார். உடனே மூன்று மணி நேரத்திற்குள் மூவர்ணக் கொடியை தயாரித்து வழங்கினார் வெங்கையா.
அதனை 1922 ல் லக்னோ காங்கிரஸ் கூட்டத்தில் பறக்க விட்டார்கள். சைதன்யத்திற்கும், புனிதத்திற்கும், சௌபாக்யத்திற்கும் சின்னங்களாக காஷாயம், வெள்ளை, பச்சை நிறங்களுடன் கண்ணைக் கவரும் அழகுடன் மூவர்ணக் கொடியை தயாரித்திருந்தார் வெங்கையா.
பின் கொடியின் மத்தியில் ராட்டினத்திற்கு பதில் அசோகரின் தர்ம சக்கரத்தை சேர்த்து நம் தேசிய கொடியாக தேர்ந்தெடுத்தனர்.

வெங்கையா தேசிய கொடிக்காக உற்சாகமாக தீக்ஷையுடன் செய்த முயற்சியை காந்திஜி பாராட்டினார்.
பிங்களி வெங்கையா இறக்கும் முன், “நான் மரணமடைந்த பின் தேசிய கொடியை என் உடலின் மீது போர்த்தி மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு சென்ற பின் கிருஷ்ணா நதி தீரத்திலுள்ள ஒரு அரச மரத்தில் அக்கொடியை கட்டி பறக்க விட வேண்டும். என் உடல் முழுவதும் தகனமடையும் வரை அது காற்றில் பறந்து கொண்டிருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதன் படியே அவர் மரணமடைந்த பின் செய்ததாக அந்நாளைய புகழ் பெற்ற ஆயுர்வேத மருத்துவரான டாக்டர் கூடுரு நமச்சிவாயம் என்பவர், ‘ஜாதீய பதாக நிர்மாத’ என்ற கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
தேச பக்தர், எழுத்தாளர், விஞான சாஸ்திர நிபுணரான பிங்களி வெங்கையா 1963 ஜூலை 4 ஆம் தேதி பாரத மாதாவுடன் கலந்து விட்டார்.
நம் தேசிய மூவர்ண கொடியின் உருவில் அவர் மக்களனைவருக்கும் உயர்ந்த சிந்தனைகளை அளித்த வண்ணம் இன்றும் நம்முடன் வாழ்கிறார்.
- ராஜி ரகுநாதன்


