அயோத்தி விவகாரம் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின்போது கடவுள் ராமரின் வம்சமான ரகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இன்னமும் அயோத்தியில் வசிக்கிறார்களா என்று நீதிபதிகள் கடந்த வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் ராம் லல்லா தரப்பில் வாதிடும் மூத்த வழக்குரைஞர் கே.பராசரனை நோக்கி நீதிபதிகள் இந்தக் கேள்வியைக் கேட்டனர். அதற்கு பராசரன் பதிலளிக்கையில் “இது தொடர்பான தகவல் என்னிடம் இல்லை. அது பற்றிய செய்தி அறிய முயற்சி செய்வேன்’ என்று தெரிவித்தார்.ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரச வம்சத்தைச் சேர்ந்தவரும், ராஜ்சமந்த் தொகுதியின் பாஜக எம்.பி.யுமான தியா குமாரி தங்கள் குடும்பம் ராமரின் மகனான குசனின் வம்சாவளியில் வந்தது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது, ராமரின் வம்சாவளியில் வந்தவர்கள் எங்கே என்று நீதிபதி கேட்டுள்ளார். ராமரின் வம்சாவளியில் வந்தவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். அவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். எங்கள் அரச குடும்பத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறேன்.ராமர் மீது அனைவருக்கும் பக்தியும் நம்பிக்கையும் உள்ளது. அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு விசாரணை துரிதமாக நடத்தப்பட்டு, நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. தேவைப்பட்டால், ராமரின் மகனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆவணங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். எனினும், அயோத்தி வழக்கில் நானாகத் தலையிட மாட்டேன் என்று தியா குமாரி தெரிவித்தார்.
இந்த வழக்கில் தெய்வம் தாக்கல் செய்த சட்ட வழக்கு, ராமர் பிறந்த இடத்தை இணை மனுதாரராக ஆக்கியுள்ளதுடன், 1992 டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தின் மீது உரிமை கோரப்பட்டுள்ளது.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் தொடர்பான விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.