“குங்குமமும் குங்குமப்பூவும்”
(ஒரு ஏழை குழந்தைக்காக பெரியவா நடத்திய நாடகம்)
(தன்னுடைய காய்ச்சல்,கபத்திற்காக ஒரு பக்தை கொடுத்த குங்குமப்பூவை ஏழை குடியானவப் பெண்ணின் குழந்தைக்குக் கொடுத்து தான் குங்குமத்தை மருந்தாக போட்டுக் கொண்ட சம்பவம்)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
பெரியவாளுக்குக் கடுமையான காய்ச்சல்,கபம், வெங்குடி டாக்டர் என்பவர்தான் பெரியவாளைப் பரிசோதித்து மருந்து கொடுப்பார்.
இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளையும் சாப்பிடவில்லை. காய்ச்சல் – கபம் இறங்குவுமில்லை.
ஒரு பக்தை, தினமும் தரிசனத்துக்கு வருபவர். பெரியவாள் நிலையைப் பார்த்து, குங்குமப்பூவை சந்தனக் கல்லில் இழைத்து கொஞ்சம் சூடு பண்ணி பெரியவா நெற்றியில் பற்றுப் போட்டுக் கொள்ளும் பக்குவத்தில் கொண்டு வந்து கொடுத்தாள்.அந்த அம்மாள் வெகு பக்தியுடன் கொடுத்த, விலையுயர்ந்த அந்தப் பொருளை ஏதோ ஒரு சாமானியப் பொருளை ஏற்பது போல குங்குமப்பூ இருந்த வாழைத் தொன்னையை பெற்றுக் கொண்டு மேனாவில் ஓர் ஓரத்தில் வைத்து விட்டார்கள்.
அந்தச் சமயம் ஸ்ரீ காமாட்சியம்மன் வீதிவலமாக மடத்தின் அருகே வந்து கொண்டிருந்தது.
“வாசல்லே, காமாக்ஷி வந்திருக்கா, தரிசனம் பண்ணிட்டு வாயேன்…”
அம்மையார் வெளியே போனார்.
அவர் நகர்ந்ததும் ஒரு குடியானப் பெண்மணி தரிசனத்துக்கு வந்தார். ‘ஏழை’ என்று முகத்தில் ஒட்டியிருந்தது.இடுப்பில் ஒரு குழந்தை. ஆறு மாதம் இருக்கும். முட்ட முட்ட ஜலதோஷத்துடன் திணறிக் கொண்டிருந்தது.
“கொழந்தைக்கு ஜலிப்பு….மருந்து வாங்கக் கூட முடியல்லே. சாமி துண்ணூறு கொடுக்கணும்” என்று அழாக்குறையாகப் பிரார்த்தித்துக் கொண்டாள் அந்தப் பெண்மணி.
அவசரம்அவசரமாக குங்குமப்பூ தொன்னையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உடனே வீட்டுக்குப் போய் குழந்தையின் நெற்றியில் இரண்டு,மூன்று முறை தடவச் சொன்னார்கள் பெரியவா. அந்தப் பெண்ணும் உடனே போய்விட்டாள்.
“ரோட்டிலே தூசி விழுந்துடும். மறைச்சு ஜாக்கிறதையா எடுத்திண்டு போ” என்று எச்சரிக்கை வேறு!
(கவனிக்கவும்-போகும் வழியில் குங்குமப்பூ அம்மையார் பார்க்காமல் இருக்க -மறைச்சு எடுத்துண்டு போ)
அடுத்த நிமிஷம் மேனாவில் இருந்த குங்குமத்தில் கொஞ்சம் எடுத்து சிறிது தண்ணீர் விட்டுப் பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்றுப் போட்டுக் கொண்டாற்போல் இட்டுக் கொண்டார்கள் பெரியவா.
வீதிவலம் வந்த காமாட்சியைத் தரிசித்து விட்டு மேனாவின் அருகே வந்து நின்றார் குங்குமப்பூ அம்மையார்.
பெரியவா நெற்றியில் சிவப்புப் பூச்சு! “ஈசுவரா!…நான் கொண்டு வந்து கொடுத்த குங்குமப்பூவை பெரியவா பத்துப் போட்டுண்டிருக்கா!” என்று ஏராளத்துக்கு மகிழ்ச்சி.
மறுநாள் அந்த அம்மையார் தரிசனத்துக்கு வந்தார்.
“உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது…”
அந்த அம்மையாருக்கு உடலெல்லாம் புல்லரித்தது. (கவனிக்கவும்; ‘உன் குங்குமப்பூவால் என் கபம் குறைந்தது’ என்று பெரியவா சொல்லவில்லை. ஆனால், ஏதோ ஒரு ஜீவனுக்கு, அந்த அம்மையார் கொடுத்த குங்குமப்பூ பயன்படத்தானே செய்தது? அத்துடன் அந்த அம்மணியின் மெய்யான பக்தியை வேறு எந்தச் சந்தர்ப்பத்தில் பாராட்டுவது?
ஆனால், நடந்த நாடகத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த அணுக்கத் தொண்டர்க்களுக்கு உண்மை தெரியும். விலையுயர்ந்த குங்குமப்பூச் சாந்து, ஓர் ஏழை வீட்டுக் குழந்தையின் துன்பத்தைப் போக்கியது என்ற தேவ ரகசியம் தொண்டர்கள் அனுபவம் தானே!.



