“உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!”
தமிழ்க் கடவுள் முருகனின் ஏழாவது படை வீடென பக்தர்களால் போற்றப்படும் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, இரு தினங்களாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. வரும் வெள்ளிக் கிழமை 14ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் தற்போதே குவியத் தொடங்கி விட்டனர்.
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு திருமலை முருகன்தான் கண்கண்ட தெய்வம். தெய்வம் என்பதையும் தாண்டி ஒவ்வொரு குடும்பத்திலும் திருமலை முருகன் ஓர் அங்கம்.
திருமலை முருகன் இருக்கும் திசை நோக்கி வணங்கி விட்டு தான் இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட பணியை துவங்குவர்.
அப்படி இப்பகுதி மக்களின் பேச்சிலும், மூச்சிலும் கலந்து விட்ட திருமலை முருகன் திருக்கோயிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டப் பட்டுள்ளது. முருகன் சந்நிதி நேர் எதிரே கட்டப்பட்டுள்ள கோபுரம் கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இதன் கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி வெள்ளி கிழமை நடக்கிறது.
கோயில் மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றிலும் இருக்க, நடுவே அமைந்த சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாகவும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாகவும் இருக்கும் ஆலயம், சுற்றுலா வருபவர்களுக்கு சொர்க்கபுரி. இந்தக் கோவில்தான் இப்போது புதுப் பொலிவு பெற்று கும்பாபிஷேகம் காண்கிறது.
இதில் அனைவரும் கலந்து கொண்டு கண்கண்ட தெய்வம், கலியுக வரதன் அருள் பெற்று வாழ்வில் அனைத்து நலமும், வளமும் பெற வேண்டும்.