
நாம் செய்யும் வேலைகள் மூன்று விதமாக இருக்கும் என்று கூறும் ரிஷிகள் அந்த மூன்று விதமான பணிகளுக்குத் தகுந்தாற்போலவே நம் நிலைமை கூட தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்கள்.
நாம் சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று வித செயல்களைச் செய்கிறோம். இந்த குணங்களோடுதான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். இந்த மூன்று வித செயல்களையும் செய்வதற்கு புத்தி நம்மைத் தூண்டுகிறது.
ஆனால் இந்த வாழ்நாளிலேயே உயர்வடைய வேண்டும் என்றாலோ அடுத்த பிறவிகளிலும் உத்தம நிலைமை கிடைக்க வேண்டும் என்றாலோ ராஜஸ, தாமஸச் செயல்களைக் குறைத்துக்கொண்டு சத்துவ குணத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக சாத்துவிக செயல்களை மட்டுமே செய்து கொண்டு ராஜஸ, தாமஸ செயல்களை நிர்மூலமாக்கி விட வேண்டும். முதலில் குறைத்து வருவது. பின் நீக்கிவிடுவது. இந்த பயிற்சியை நினைவில் கொள்ளவேண்டும். ராஜஸ, தாமஸ செயல்களை அதிகரிக்கும் வழக்கத்தை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு வரவேண்டும்.
சாத்வீகமான செயல்கள் எவை என்பதை முதலில் அறிவோம்.
“சாஸ்திராப்யாச தபோ ஞானம் சௌச மிந்திரிய நிக்ரஹ:
தர்ம க்ரியா ஆத்ம சிந்தா ச சாத்விகம் குண லட்சணம்!”
சத்துவ குணம் எப்படி இருக்கும் என்றால், சாஸ்திரங்களைப் படித்து பயிற்சி செய்வது, தவத்தை மேற்கொள்வது, ஞானம், சுத்தம், புலனடக்கம், தர்மச் செயல்களில் ஆர்வம், ஆத்ம விசாரணை.. அதாவது நான் யார்? இந்த உலகம் என்ன? பிரம்மம் என்ன? என்று விசாரணை செய்வது… இந்த இயல்புகள் சாத்வீக குணங்கள். இவை சாத்துவிக குணம் உள்ளவர்களிடம் இருக்கும் லட்சணம்.
ராஜஸ, தாமஸ குணம் இருப்பவர்களுக்கு இவற்றின் மீது ருசி கூட ஏற்படாது. அவர்கள் ஆத்ம விசாரணை செய்ய மாட்டார்கள். சாஸ்திரங்களைப் படித்தறிய மாட்டார்கள். தவ வாழ்க்கையை ஏற்கமாட்டார்கள்.
ராஜச குணம் மிகுதியாக இருப்பவர்களிடம் எப்படிப்பட்ட லட்சணம் இருக்கும் என்றால் ஏதாவது ஒரு வேலையை தொடங்கும் வரை ஆர்வமாகத்தான் இருப்பார்கள். ஆனால் சிறிது சிறிதாக தைரியத்தை இழப்பார்கள். அயோக்கியத்தனமான செயல்களைச் செய்வதற்கும் தயாராக இருப்பார்கள். அவர்களின் லட்சியம் என்னவென்றால் விஷய சுகங்களை அனுபவிப்பதே! எந்த வேலையைச் செய்தாலும் சுகமாக வாழ வேண்டும்…. புலன்களை சுகப்படுத்த வேண்டும்! அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிந்து ஈடுபடுவார்கள். அச்செயல்களைச் செய்யும்போது ஏற்படும் அதைரியம், கவலை போன்றவை ராஜச குணங்களின் இயல்பு.
தற்போது நாம் இந்த யுகத்தில் அதிகமாக பார்ப்பது ராஜசச் செயல்களைத்தான். ஒவ்வொருவனும் தன் இந்திரியங்களுக்கு சுகம் அளிக்க வேண்டும். அதற்காக எதையாவது சம்பாதிக்க வேண்டும்… எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக செய்யும் வேலைகள் அனைத்தும் கவலையோடு கூடியனவாக இருக்கும். முதலில் உற்சாகமாக ஆரம்பித்து விடுவான். ஆனால் வேலை நடந்து கொண்டிருக்கும்போது அதைரியம், கவலை இவற்றுக்கு ஆளாவான். அவற்றையே இப்போது டென்ஷன், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன்… போன்ற சொற்களால் குறிப்பிடுகிறோம். இந்நாட்களில் எங்கு பார்த்தாலும் இவையே காணப்படுகின்றன. இவை ராஜச இயல்பினால் ஏற்படுகிறது.
இதனை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியை நாம் செய்ய வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டும்? சாத்துவீகமான இயல்புகளை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும். சிலருக்கு இயல்பாகவே சாத்வீக குணங்கள் இருக்கும். சிலருக்கு இருக்காது. அப்போது அவற்றை வளர்த்துக் கொள்ள புத்திபூர்வமாக முயற்சிக்க வேண்டும்.
தாமசச் செயல்கள் எப்படி இருக்கும்? பேராசை, நித்திரை, கோழைத்தனம், குரூர குணம், நாத்திக புத்தி, ஒன்றிக்காக பலவித செயல்களைச் செய்வது… அதாவது சுகப்படுவதற்காக வெவ்வேறு வியாபாரங்கள் செய்வது, பிறரிடம் கையேந்துவதற்குக் கூட வெட்கப்படாமல் இருப்பது, பிறரை வஞ்சிப்பதற்கும் பின் வாங்காமல் இருப்பது, அவசர குணம்…. இவை தாமச குணத்தவரிடம் காணப்படும் இயல்புகள்.
“லோப: ஸ்வப்ன அத்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்ன விருத்திதா
யாத ஷ்டுசா பிரமாதஸ் ச தாமசம் குண லட்சணம் !”
இபப்டிப்பட்ட தாமச குணங்களோடு எத்தனை வேலைகள் செய்தாலும் சுகம் கிடைத்தது போல் காணப்படுமே தவிர நிலைத்து நிற்காது. அதுமட்டுமல்ல தாமஸ குணத்தில் அந்த செயல்களைச் செய்யும்போது செய்பவன் வெட்கப்படமாட்டான். தப்பு செய்வதற்கு கூடத் தயங்க மாட்டான். உண்மையில் அவை தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்கள். ஆனால் அவன் வெட்கமில்லாமல் செய்கிறான். அதனால் உலகத்தவரின் பார்வையில் நீசமானதும் லோகத்தின் கண்ணோட்டத்தில் வெட்கப்பட வேண்டியதுமான செயல்களைச் செய்வதற்கு துணிவதே தாமஸகுண லட்சணம். அவ்வாறு வெட்கப்பட வேண்டிய செயல்களை வெட்கமில்லாமல் செய்பவன் யாரோ அவன் தாமச குணத்தான்.

இம்மூவரில் யார் அதிகம் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றால் சத்துவ குணம் உள்ளவர்கள். ஏனென்றால் சாத்வீகர்களின் பிரயோஜனம் ஒன்றே ஒன்றுதான். அது சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம். அதற்கான செயல்களை மேற்கொள்வான்! அவ்வாறு செய்யும்போது கூட தலைகுனிவை ஏற்படுத்தாத செயல்களில் மட்டுமே ஈடுபடுவான். திருப்தியாக சமுதாயத்தில் யாரும் நிந்திக்காத விதமாக உள்ள செயல்களைச் செய்வான். அப்படிப்பட்ட சத்கர்மங்களை செய்பவன் சாத்வீகன்.
சாத்துவிகச் செயல்களால் என்ன கிடைக்கும்? ஆத்மதிருப்தி கிடைக்கும். இது மிகச் சிறந்த அம்சம். உடல் உறுப்புகளை திருப்திப்படுத்தும் குணம் ராஜஸ, தாமஸ செயல்களில் காணப்படுகிறது. ஆனால் ஆத்ம திருப்தி என்பது சாத்துவிக செயல்களில் காணப்படுகிறது.
சாத்துவிகனுக்கு அதிக அளவில் உலக விவகாரங்கள் இருக்காது. அதேபோல் பெரிய அளவில் வருமானம் இருக்காது. பங்களாவும் வசதியும் இருக்காது. ஆனாலும் மானசீகமாக திருப்தியில் இருப்பான். எதனால்? சாத்வீக குணத்தால் அத்தகைய திருப்தி கிடைக்கிறது.
சாத்துவிக குணம் யாரிடம் இருக்குமோ அவர் தெய்வீக நிலையை அடைவார். ராஜஸ குணம் இருப்பவர் மனித நிலையை அடைவார். தாமச குணம் கொண்டவர்
விலங்கு, பறவை போன்ற பிறவி எடுப்பார். இதன்மூலம் யாருடைய இடம் என்ன என்பது புரிகிறதல்லவா?
தாமசச் செயல்களைச் செய்பவர்கள் அனைவரும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சமமானவர்கள். ராஜஸ குணத்தவர் மத்தியில் இருப்பவர். மனிதர்களில் அதிகமாக ராஜச குணம் நிறைந்து காணப்படுகிறது. சாத்வீக குணங்கள் குறைவாக இருக்கும். இது மனிதர்களின் இயல்பு. தேவதைகளில் சாத்துவிக இயல்பு அதிகமாக இருக்கும்.
நாமனைவரும் மனிதர்கள் என்பதால் மனிதர்களுக்கு ராஜஸம் இயல்பு என்பது தெரிந்து போனதால் நாம் செய்ய வேண்டிய முயற்சி என்னவென்றால் அந்த ராஜஸ குணத்தை கட்டுப்படுத்திக்கொண்டு சாத்வீக குணத்தை பெருக்குவதற்கு பிரயத்தனம் செய்வதே! அதற்காகத்தான் போதனைகள், காதைகள், உபன்யாசங்கள்….! இவையெல்லாம் எதற்காக என்றால் சாத்துவிக குணங்களை வளர்த்துக் கொள்வதற்காக. இதை அறிய வேண்டும்.
நம்மில் சத்துவ குணத்தை நிரப்பிக் கொள்வதற்காக ஆன்மீக சாதனைகள் நடக்கவேண்டும். போதனைகள் கேட்கப்பட வேண்டும். அதன் மூலம் நமக்கும் சமுதாயத்திற்கும் நலம் விளைகிறது.
அதனால் ராஜச இயல்பு நமக்கு இருந்தபோதிலும் சாத்துவிக குணங்களை இலக்காகக் கொண்டு சத்துவ குணத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ராஜசம் இருக்கும்படியாக நடந்து கொண்டால் நமக்கு வேதனை இருக்காது. இதனை அறியவேண்டும்.
இத்தனை அழகாக மனதின் செயல்களை மூன்று குணங்களின் பெயரால் விளக்கி கூறிய உண்மையான மானசீக தத்துவ விஞ்ஞானிகளான பாரதிய மகரிஷிகளுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்


