“நம் பெரியவாளும் சிருங்கேரி பாரதி ஸ்வாமிகளும் பொரிந்து தள்ளிய இரு சம்பவங்கள்”
“‘ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும்
கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?-பெரியவா
‘நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர் வித்யாசம் பாராட்டிண்டு அங்கே பாதி பூஜையிலே விட்டுட்டு வந்தது மஹா தப்பு. க்ஷணம் கூட இங்கே நிற்காதேயும். போம் அங்கேயே’-சிருங்கேரி பாரதி ஸ்வாமிகள்.
.
கட்டுரையாளர்-ரா.கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள்.-புத்தகம்.
பெரியவா அப்படி ஹாங், ஹாங் ன்னு பொருமி நான் வேறெப்போதும் பார்த்ததில்லை’ என்று கூறி காஞ்சி மட மேனேஜர் விஸ்வநாத ஐயர் ஒரு சம்பவம் நினைவு கூர்வார். பாரதி ஸ்வாமிகள் அவதூதராக, ஆடிப்பாடி, அழுது, சிரித்துக்கொண்டு அதீத நிலைகளில் இருந்த சமயங்களில் ஒன்றாம்.
அதை பற்றி ஓர் அடியார் மஹா பெரியவாளிடம், ‘அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதாம்’ என்றாராம். அவ்வளவுதான், பெரியவாள் காதில் நாராசம் பாய்ந்தாற்போல, ‘சிவ சிவா, சிவ சிவா, சிவ சிவா’ என்று ஏறக்குறைய அலறியே விட்டு, முன்பின் எப்போதும் இல்லாத படி, பொருமி தீர்த்து விட்டாராம்.
‘ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும் கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?’ என்று வெகு நேரம் பொரிந்து தள்ளிவிட்டு, ‘சந்நிதிக்கு போய் சந்திரமௌலீஸ்வரர் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கோ’ என்று முடித்தாராம்.
மஹா பெரியவாள் 1935 இல் கல்கத்தாவுக்கு எழுந்தருளி நவராத்திரி வழிபாடு நடத்தினார். அவ்வழிபாட்டுக்கான நிர்வாக குழு உறுப்பினர்களில் சிருங்கேரி பீடத்து பரம பக்தரான மந்திரேஸ்வர சர்மா ஒருவர்.
நவராத்திரி முதல் நான்கு நாள் – சதுர்த்தி வரை – பூஜைகளில் தொண்டு செய்த அவருக்கு அதற்கு மேல் பொருந்தவில்லை. ‘என்ன இருந்தாலும், நம் சிருங்கேரி பத்ததியில் நம் சிருங்கேரி ஆச்சாரியாள் செய்யும் பூஜை போல் ஆகுமா?’ என்று தோன்றி, இருப்பு கொள்ளாமல், ஆயிரம் காவதம் கடந்து சிருங்கேரி அந்து சேர்ந்தார்.
ஆனால் பாரதி ஸ்வாமிகளோ தம் இயல்புக்கு மாறாக அசாத்திய கடுமையுடன் அவரை நோக்கினார்.
‘நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர் வித்யாசம் பாராட்டிண்டு அங்கே பாதி பூஜையிலே விட்டுட்டு வந்தது மஹா தப்பு. க்ஷணம் கூட இங்கே நிற்காதேயும். போம் அங்கேயே’ என்று நிர்தாட்சிண்யமாக சொல்லி விட்டார்.
சர்மா பக்குவியாதலால் பாடம் பெற்றார். பாவனா சுத்தி பெற்றார்.
இன்று போல், பிரயாண வசதிகள் இல்லாத அந்நாளில் எப்பாடோ பட்டு சரியாக விஜய தசமி அன்று கல்கத்தா சேர்ந்து மஹா பெரியவாளின் காலில் விழுந்தார்.
பாரதி ஸ்வாமிகள் கூறியதை சொல்லி, தமது பேத எண்ணம் பேதிக்கப்பட்டதை தெரிவித்து கொண்டார்.
மஹா பெரியவாள் ஆனந்தமாக சிரித்துக்கொண்டு அவருக்கு தாராளமாக நவராத்திரி பிரசாதங்கள் அளித்தார்



