
பகவத்கீதை: மானிடர் ஆன்மா மரணமெய்தாது!
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பள்ளிப் பருவத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு என் வீட்டில் அதிகமான கட்டுப்பாடுகள் கிடையாது. என்னுடைய தாயார் அவருக்குப் பிடித்த படங்களுக்கு அழைத்துச் செல்வார். என் தந்தையாருக்கு பக்திப் படங்கள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, ஆந்திராவில் எடுக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் மிகவும் பிடிக்கும்.
இப்படி இருக்கையில் எங்கள் ஊருக்கு “கர்ணன்” படம் வந்தது. என் தாயார் என்னை மதியக் காட்சிக்கு அழைத்துச் சென்றார். என் தந்தையார் இரவுக்காட்சிக்கு என்னை அழைத்துச் சென்றார். அடுத்த சில நாட்களுக்கு படத்தைப் பற்றிய விவாதம் இல்லத்தில் நடந்தது. எனது தாயார் கர்ணனும் துரியோதனனின் மனைவி பானுமதியும் சொக்கட்டான் விளையாடும்போது வரும் “எடுக்கவோ, கோர்க்கவோ” என்ற துரியோதனின் வசனத்தை சிறப்பாக எடுத்துப் பேசுவார்.
என் தந்தையார் பகவத் கீதையை ஏறத்தாழ மிகச் சரியாக ஒரு பாடலில் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னார். பின்னர் எப்படியோ பள்ளியில் எவனோ ஒருவன் வாங்கிவந்திருந்த கர்ணன் படத்தின் பாட்டுப்புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துவந்து என் தந்தையாரிடம் விளக்கம் கேட்டேன்.
அவர் சொன்னார் “பகவத்கீதை 18 அத்தியாயங்கள் கொண்டது. அதில் முதல் ஆறு அத்தியாயங்கள் மனிதனைப் பற்றியது. அடுத்த ஆறு அத்தியாயங்கள் கடவுளைப் பற்றியது. கடைசி ஆறு அத்தியாயங்கள் மனிதன் இறைவனை அடையும் வழியைப் பற்றியது. இந்தப் பாடலில் இந்த மூன்று பிரிவுகளையும் அழகாக பிரித்துப் பாடியிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். பாடல் இதோ –
மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா..
மரணத்தின் தன்மை சொல்வேன்…
மானிடர் ஆன்மா மரணமெய்தாது.. மறுபடி பிறந்திருக்கும்.
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய்..
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்துதான் தீரும் ஓர் நாள்.
இதற்கு அர்ஜுனன் சொல்கிறான் – கண்ணா உனக்கு எல்லாம்தெரியும்; ஆனால் எனக்கு உன்னை தான் தெரியும்; பரந்தாமனைத் தான் தெரியும்; நீயா என்னை இந்த பாவத்திற்க்கு தூண்டுவது.
பாடல் மூலமாக கண்ணன்,
என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ, காண்டீபம் நழுவ விட்டாய் … காண்டீபம் நழுவ விட்டாய்..
மன்னரும் நானே.. மக்களும் நானே.. மரம் செடி கொடியும் நா~னே..
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்..
துணிந்து நில் தர்மம் வாழ
அர்ஜுனன் சொல்கிறான் – ஆனால் கொல்ல போவது நான் அல்லவா. அந்த பழி எல்லாம் எனக்கல்லவா. கண்ணன் காட்டிய வழியில் நீ எண்ணியதை நான் செய்து விட்டால்..
அதனால் வரும் பாவ பலனை யார் சுமப்பது?
இந்த பிழைக்கு நீ உடந்தை ஆவாயா? சொல்.. சொல்…
கண்ணன் பாடலில் பதில் சொல்கிறார்…
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்…
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.
கண்ணனே காட்டினான் … கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக ! நின் கை வன்மை எழுக!
இக்களமெலாம் சிவக்க வாழ்க!
இந்தப் பாடல்தான் எனக்கு பகவத் கீதை பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை தந்த ஒரு பாடல். இதில் முதல் பத்தி மனிதனைப் பற்றி என்ன சொல்கிறது? மனிதன் பயப்படுவது மரணத்திற்கு மட்டுமே. “பிற உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது; மரணம் விளைவிக்கக் கூடாது” என்பது தர்மம். ஆனால் இங்கே கண்ணன் அர்ஜுனனைக் கொலை செய்யத் தூண்டுகிறார்.




