
பகவத்கீதை பகுதி 9 – மகாபாரதக் கதை
மகாபாரதம் பற்றி தமிழிலக்கியங்கள்
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
மகாபாரதம் மிகவும் தொன்மையானது. கொடையில் சிறந்தவனை “கர்ணன்” என்றும் நீதிமானாக வாழ்பவனை “தருமன்” என்று அழைப்பது தமிழகத்தில் வழக்கம். எவரேனும் நீட்டி முழக்கிப் பேசினால் அவர் ‘பாரதம் படிக்கிறார்’ எனச் சொல்வது வழக்கம். மகாபாரதம் என்ற பெயரே மிக நீண்ட கதை என்று சொல்லத்தான் வந்தது.
மகாபாரதம் பற்றி தமிழிலக்கியத்தில் நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன.
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
முரஞ்சியூர் முடிநாகராயர், புறநானூறு 2, 13-16
(சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்)
ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய,
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
– பெரும்பாணாற்றுப்படை(415-417)
நளபாகம், பீம பாகம்
கா எரியூட்டிய கவர் கணைத் தூணி
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருட்
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில் (238-241)
என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் புலனாகின்றன.
கலித்தொகையில் உவமை வாயிலாகப் பாரதக் கதை நிகழ்ச்சிகள் பல காட்டப் பெற்றுள்ளன.
01. அரக்கு இல்லில் ஐவரைக் குடிபுகச் செய்து துரியோதனன் அதற்குத் தீயிட்டது
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு, (25:1-4),
02. அந்தப் பேராபத்திலிருந்து வீமன் தன் கிளைஞரைக்காப்பாற்றியது
ஒளி உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, (25:5-8),
03. துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றியது, அவனது நெஞ்சத்தை வீமன் பிளந்தது
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்! (101:18-20),
04. துரியோதனன் தொடையை வீமன் முறித்தது
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், (52:2-3),
05. பாரதப் பொருகளம்
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், (104:57-59),
முதலியவற்றைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம்.
சிலப்பதிகாரத்தில், (1) ‘இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேர் ஊர் செருவும், பாடி’ (26:238-239) என இராமாயண பாரதப் போர்கள் இரண்டும் சுட்டப்பெற்றுள்ளன. (2) பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தமை குறித்தும் (27:7-10), (3) அப் போரில் சேரன் பெருஞ் சோறு அளித்தமை குறித்தும் (29:24), (4) கண்ணன் பாண்டவர்க்குத் தூது நடந்தமை குறித்தும் (17:34,37) குறிப்புகள் வந்துள்ளன.
விராடனது நகரில் விசயன் பேடியாக வாழ்ந்தமை பற்றி மணிமேகலையில் குறிப்பு உள்ளது (3:146-147).



